Monday, June 17, 2013

'ஆடு நனைகிறதே ' தினமணி தலையங்கம் யாருக்கு உபதேசம்?

                                                 யாருக்கு உபதேசம்?                                                 
   ‘ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது’ தலைப்பிட்ட 13-6-2013 தேதியிட்ட தினமணியில் தலையங்கம்’ தகுதி ‘ ‘திறமை’ என்ற துருப்பிடித்த ஆயுதமதை கூர்தீட்டிக்கொண்டிருக்கும் மேட்டுக்குடி சிந்தனைத் தளத்திலேயே அமைந்திருக்கிறது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைபவர்கள்தான் திறமையான ஆசிரியர்கள் என்று கருதுவது மாயைதான். வேலைச் சந்தையில் உழைப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது வாய்ப்பிடங்களில் எண்ணிக்கை குறைவாக தேவையுள்ளதால் தெரிந்தெடுக்கும் ஒரு யுத்தியாகவே இதைக் கருதலாம்.இது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்றுதான்.
      போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் பயிற்று முறைக்கும் சம்பந்தமேயில்லை என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத்தருகிறது. .பயிற்றுமுறை என்பது ஒருவர் பெறும் அனுபவங்களோடு வகுப்பறையை உயிரூட்டும் களப்பணியாகும்.இது ஒற்றையடிப் பாதையல்ல,மாணவர்களும் ஆசிரியரும் கலந்துரையாடி அறிவைப் பகிர்ந்துகொள்ளும் இருவழிப்பாதையாகும். மதிப்பெண் என்பது வெறும் மனப்பாடம் சார்ந்த்து. மனப்பாடத்தில் கில்லாடிகளெல்லாம் அடித்தட்டு மாணவர்கள் நிலைக்கு இறங்கி வந்து தெளிவான அனுபவ உதாரணங்களோடு உற்சாகமாக உத்வேகமுடன் பாடம் நடத்துவார்கள் என மதிப்பிடுவது தவறானது.
     சமூகநீதிப்பார்வையில் இட ஒதுக்கீடு  அடிப்படையில் ஆந்திராவில்,அசாமில் , ஒடிசாவில் பீகாரில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதுபோல் தமிழகத்திலும் மிக அவசியமாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கோருவதும் குரல்கொடுப்பதும்  கல்வியாளர்கள் கடமை மட்டுமல்ல,சமூக நீதியை ஆத்மார்த்த ரீதியாக விரும்புகிற அரசியல் கட்சிகளுக்கும்.மனிதநேயப் பார்வைகொண்ட  உழைப்பாளரின் கடமையுங்கூட.
   ஆசிரியர் பணியிடங்களின் தேர்விற்கு தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி ஆந்திராவில் மதிப்பெண்களில் பொதுப்போட்டிக்கு 60 சதவீதமும்,பிற பிற்படுத்தப்பட்டோருக்கு50 சதவீதமும்,தாழ்த்தப்பட்டோர் ஊனமுற்றோருக்கு 40 சதவீதமும் என்றும், அசாமில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பிரிவினருக்கு 55 சதவீதமும்,ஒடிசாவில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பிரிவினருக்கு 50 சதவீதமும், பீகாரில் பொதுப்போட்டியில் 60 சதவீதமும்,பிற பகுதியினருக்கு 55 சதவீதமும் என நிர்ணயித்து தேர்வு செய்யப்படும்போது சமூகநீதிப் போராட்டங்கள் நிகழ்ந்தும் இன்னும் சமூகபாகுபாடு மற்றும் தீண்டாமைக் கொடுமை தாண்டவமாடும் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் பணியிட விழுதுகளைக் கைப்பற்றி மேலேறுவதற்கு அம்மாநிலங்கள்போல நடைமுறைப்படுத்தவேண்டும் என கேட்காமல் கொச்சைப்படுத்துவதுதான் மிகப்பெரிய சமூக அநீதி. 
         மேற்குறிப்பிட்ட பிற மாநிலங்களில் 60 சதவீத்த்திற்குக்கீழ் மதிப்பெண பெற்று ஆசிரியர் பணியிடங்களில் நியமனம்பெற்றோர் திறமையில்லாதவர்கள் என்பதற்கு ஏதேனும் ஆய்வுகள் உண்டா?

   ‘ பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் கணிதம்,விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர் பொதுப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதுபோல் 130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பலரும் இட ஒதுக்கீடு இடங்களுக்கு தள்ளப்ப்ட்டிருக்க,வெறும் 90மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர் இதே போன்ற மோசடி பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திலும் நடைபெற்றிருக்கிறது 13.11.2002ல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும்,15.2.2010ல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டியலிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.’ என்ற விபரங்களை ஏப்ரல் 10-30 தேதியிட்ட உண்மை இதழில் அதன் ஆசிரியர் கி.வீரமணி தலையங்க்த்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தகுதி திறமைதான் அளவுகோல் என்று பல்லவி பாடுவது எப்படிப் பொருந்தும்? திருத்தவேண்டியது யாரை? உரிமைகளுக்கு குரல் கொடுப்போரையா அல்லது ஒட்டுமொத்த கொள்கையின்மூலமாக பொதுஜனங்களை மூளைச் சலவை செயது தரமான கல்வி வேலைவாய்ப்பிலிருந்து கைகழுவும் அரசையா?  பழங்குடியின மக்களின் வாழ்நிலையும் ,வாழ்விடமும் பள்ளிகள் அமைந்துள்ள இடமும் மலையும் மடுவுமான சூழலில் உள்ளபோது ,அவர்களிலிருந்து படித்து மேலேறிவருபவர்களுக்கு பொதுப்போட்டியாளர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நியாமாகுமா? இந்தச்சூழலில் மலைவாழ் மக்கள் சங்கம் அரசாணை எண் 252 ஐ நீக்க்க் கோருவது  நியாயம்தானே?
       பட்டங்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வெறும் சென்சஸ் கணக்கிற்கு புள்ளிவிபரங்கள் திரட்டுவதற்காவா? அப்படியென்றால் பொது மக்கள் கணக்கெடுப்பிலேயே புள்ளிவிபரங்கள் கிடைத்து விடுமே, வேலை வாய்ப்பகங்கள் எதற்கு? பதிவு செய்து காத்திருப்போரில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து பணியமர்த்தினால் வகுப்பறை நுட்பத்தோடு திறமையை பெருக்க முடியாதா?
    தனியார் பள்ளிகளில் கற்பித்தல் திறமையைப் பார்த்து நியமனம் செய்வது மிக குறைந்த அளவு பள்ளிகளில்தான். சாதிகள் மதங்கள் அடிப்படையில் கல்விக் கடை திறந்திருக்கிற இடங்களில் செயல்படுத்தப்படும் நியமன அரசியலே மிகப் பெரிய ஆய்வுக்குரியது.அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் பொதுப்போட்டி காலியிடங்களில் எத்தனை தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்,அருந்த்தியர் ,மிகவும் பிற்படுத்தப்ட்டோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு மனந்திறந்த ஆயவை அரசோ அல்லது சமூக விரும்பிகளோ ஆய்வு விசாரணை மேற்கொண்டால் அப்போது தெரியும் (சில நிறுவனங்களைத் தவிர)தனியார் கல்வி நிறுவனங்களின் உண்மையான நியமன அரசியல். இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும் அதன்  நியாயத் தன்மையையும் மக்கள் மத்தியில் அரசாங்கங்களோ அல்லது ஊடகங்களோ(சில இதழ்களைத் தவிர) அறிவு ஜீவிகளோ  விளக்குவதில்லை.
      எங்கெங்கு காணிணும் மனப்பாட முறையும், 9 ஆம் வகுப்பு பாடங்களை விரைவாக முடித்துவிட்டு அதே வகுப்பில் 10 ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதும், 11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களை முடித்துவிட்டு திரும்பத்திரும்ப தேர்வு பயிற்சி(உருப்போடும் பயிற்சி) கொடுப்பது அதிக மதிப்பெண் எடுக்கவும்,பள்ளியில் அதிக தேர்வு சதவீதம் எடுக்க உதவுமேயொழிய சமூகநேய மனிதனை உருவாக்கும் கல்வியாகுமா? சொல்லப்போனால் ஆசிரியர்களுக்கு பி எட், எம் எட் போன்ற பயிற்சி முறைகளை வலிமையுள்ளதாக மாற்றி. அரசு உதவி பெறும்  தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி .  சமூக நீதியை நிலைநாட்டுவதும்,அரசு  கல்வி நிறுவனங்களிலும் தற்போது தமிழகத்தில் விரிவடைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பட்டியலின அருந்த்தியர்) உள் இட ஒதுக்கீட்டு பகுதியினரையும் உள்ளடக்கி அமுல்படுத்துவதை கண்காணித்து அரசிடம் வலியுறுத்தவேண்டுமேயல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதி உரிமைக்கு ஆப்பு வைக்கிற சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்தோரை பாதுகாக்க  உதவாது. உள் இட ஒதுக்கீடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பலகட்ட போராட்டங்களுக்குப்பின் ஏற்படுத்தப்பட்டதால்தான் அருந்த்தியர் சகோதர சகோதரிகள் இட ஒதுக்கீட்டு ஏணியை எட்டிப்பிடிக்கிறார்கள். அதிலும் உலை வைக்க்க் கூடாது.
        
     மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றிருக்கிற பத்திரிக்கைகளும் ஊடகங்களும் திருத்தவேண்டியது யாரை? உரிமைகளுக்கு குரல் கொடுப்போரையா அல்லது ஒட்டுமொத்த கொள்கையின்மூலமாக பொதுஜனங்களை மூளைச் சலவை செயது தரமான கல்வி வேலைவாய்ப்பிலிருந்து கைகழுவும் அரசையா?