Tuesday, January 8, 2013

வீதிகள்-கல்வி வளாகங்கள் விளையாட்டைப் புதைக்கலாமா?


         வீதிகள்-கல்வி வளாகங்கள் விளையாட்டை புதைக்கலாமா?
          ‘நாந்தா ங்கொப்பண்டா நல்லமுத்தன் பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரண்டா-தங்கப்பிரம்பெடுத்து தாலி கட்ட வாரண்டா---வாரண்டா  கபடி கபடி கபடி என்று சிறுவயதில் விளையாடிய நினைப்பு ஒருபுறம். ‘ ஓடி விளையாடு பாப்பா-நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாஎன்ற பாடலை நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பாட்டுப்போட்டியில் பாடி பரிசு வாங்கிய நினைப்பு இன்னொருபுறம். இப்போது பாப்பாக்களையோ ஆண்குழந்தைகளையோ இரண்டாண்டு முடிந்த்துமே பக்கத்திலிருக்கும் கான்வெண்டு பள்ளியில் தொட்டிலைக் கட்டிப்போட்டுவிட்டு ஆங்கில ரைமே தாலாட்டாக மாற்றி விளையாட்டுக்கு முழுக்குப்போடும் விபரீதம் தொடங்கி ‘மார்க மார்க் மார்ககுழந்தை இரவில் கனவில் தமிழில் கத்தும் நிலைக்குத் தள்ளிவிட்டதை பாப்பாக்களுக்கு பதினாறு வகையான வாழ்க்கை மற்றும் தேசப்ற்றுச் சிந்தனையை அப்பாடலில் அள்ளித் தெளித்த பாரதி இன்றிருப்பானேயானால் மதம்பிடித்த யானையால் வீசியெறியாமலே மீண்டுமொருமுறை மரணத்தை வரவழைத்திருப்பார். ( அவர் எத்தனை முறை மரணித்தாலும் எவராலும் அவரை எரிக்கவோ புதைக்கவோ முடியாது காரணம் அவர் இறந்தால்தானே?என்பது வேறு விஷயம்)
    தமிழகத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் வீடுகளில் ஒட்டுத்திண்ணைகளின் பார்வைகளோடு மாலை நேரங்களிலும் இரவு பத்துமணிவரை கதைகள் சொல்லி, ‘பல்லாங்குழி ஆடி கபடியில் கொண்டாடி, பெண்களின் கும்மியாட்டத்தில் குதூகலித்த வீதிகள் வரலாற்றுக் கண்காட்சிக் கூடங்களில் மட்டும் பார்க்கமுடியும். இந்தப் பண்பாடு தொடரவேண்டும் என்பதற்காகவோ என்னவோ பாண்டிச்சேரி அரசு, அங்கு வீடுகளை ஒட்டுத்திண்ணையோடும் பாரம்பரிய பண்பாடோடும் வீடுகட்டினால், அவ்வீட்டு உரிமையாளருக்கு ஆண்டுதோறும் ரூ 10000 வழங்கப்படுகிறதாம்.தமிழகத்தில் இந்த மாதிரித் திட்டம் வந்தாலும் கிராமியக்கதையில் வரும் (சமீபத்தில் வடிவேல் காமடியாக திரைப்படத்தில்)கடன் வாங்கி வெட்டிய கிணறு காணாம்ல் போன மாதிரி பண்க்கணக்கு கச்சிதமாக இருக்கும். இப்படி நம்ம ஊர்களின் வீதிகளும் வெறிச்சோடிப் போனது. அழுகும் குழந்தையை வீதிக்குத் தூக்கி வந்து’’நிலா நிலா ஓடிவாபாட்டுப் பாடியோ அல்லது பாடாமல் நிலவைக் காட்டியோ சோறு ஊட்டிய தாய்மார்கள் இன்று வீட்டுக்குள்ளேயே ‘அந்த அஜித்தப் பாரு, அந்த ஆண்டியப் பாருஎன்று டிவிப் பெட்டியக் காட்டி சோறு ஊட்டும் எந்திரயிக தாய்மார்களாக மாறிவிட்டார்கள் என்பது சோகமே.
    ஏக்கர் கணக்கான நிலத்தில் மலையடிவாரங்களிலோ,சமவெளிகளிலோ  கட்டப்பட்டிருக்கின்ற மெட்ரிகுலேசன் பள்ளி, கலை அறிவியல் கல்லூரி,பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்களின் போது மட்டும் புதுப்பெண்,புதுமாப்பிள்ளை அலங்கரிப்பில் மின் ஒளியில் ஒருநாள் மட்டும் சடங்குக்காக அல்லது தரச் சான்று கொடுக்கும் குழுவின் மதிப்பீட்டுக்காக மினுங்கிவிட்டு மறையும். உள்ளூர் விளையாட்டுகளெல்லாம் ஓடி மறைந்து கிரிக்கெட் மட்டும் கொஞ்சம் இளைஞர்களிடம் குதியாட்டம் போடுகறது. அதுவும்கூட மார்க், வேலை, இண்டர்வியூ கனவில் கூடவே கிரிக்கெட் மட்டை வைத்திருந்த கைகள் செல்போன் வைத்துக்கொண்டு காதுகள் போன் தொடர்பில் திரைப்பாடல்கள் ரசிகக்க வைப்பதால் குறைந்து வருகிறது.  
 ஏதோ சில ஊர்களில் பழைய பார்பரியத்தின் எச்சங்களாக பொங்கல, தீபாவளி,கிறிஸ்துமஸ் விழாக்களின்போது சில விளையாட்டுகளை ஆடி நினைவு படுத்துகிறார்கள்..
     விளையாட்டு கலை இலக்கிய உறவுகள் மூலம் மாணவ மாணவியரை மனிதர்களாக செதுக்கி தேசத்தை நிர்மாணிக்கிற நாளைய தலைவர்களாக மாற்றவேண்டிய ஆரம்ப, நடுநிலை உயர்நிலை மேல்நிலை கல்லூரி கலவித்திட்டங்கள் அரசின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டே அவர்களின் உடலின் உறுதியை சிந்தனையின் ஆற்றலை முடமாக்குவது நியாயமாகுமா?அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களே பல மடங்கு அதிகமாகி கல்வி வியாபாரத்தை உறுதி செய்து விளாட்டுக்கும் கலை இலக்கியத்துக்கும் விடை கொடுத்தபின்பு எஞ்சியிருக்கும்  எண்ணிக்கையில் குறைந்துபோன உதவி பெறும் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் தனியார் கல்வி வியாபார மேலாண்மைக்கு இரையாகிப்போகும் விபரீதம்தானே அரங்கேறும்.!
          'காலை எழுந்தவுடனை படிப்பு-பின்பு
           கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
           மாலை முழுதும் விளையாட்டு-என்று
           வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா' என்று பாரதி ஒரு கால அட்டவணை கொடுத்ததை இளமை ரத்தம் ஒடும்போதாவது பழக்கப் படுத்துவது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இதனை மனதில் இறுத்திக் கொண்டு,    அனைத்து பள்ளி கல்லூரிகளிலும்,அனைத்து பாடங்களுக்கு பாடவகுப்பு இருப்பது போல அதிகமான விளையாட்டு ஆசிரியர்களை நியமனம் செய்து, அனைத்து மாணவ மாணவிகளும் தினமும் ஒருமணி நேரம் ஓடி ஆடி விளையாடும் பாட வகுப்பில் கட்டாயமாகப் பங்கேற்கச் செயவது ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பதோடு அறிவை விருத்தி செய்ய உடல் உரம்பெறும். இல்லையேல் ஏதோவொரு பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைக்கு இட்டுச் சென்று உடல் விளையாட்டுகளை ‘ அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்குமடி நாளை என்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படத்திலோ, ‘வெண்ணிலா கபடிக்குழு ‘ திரைப்பட பார்க்க முடியுரே தவிர நிஜத்தில் ஆண் பெண் புஜங்களை உயர்த்திசமூகப் புத்திக்கு சாணை தீட்டி நாளைய உலகை தோளில் சுமக்க வைக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் நம் நாடு பதக்கங்களை வாங்கி குவிக்காவிட்டாலும் உடலும் உள்ளமும் மனிதப் பண்பும் ஆரோக்கியத்தை தரிசிக்கும். இத்தன்மை வாய்ந்தவைகளை வீதிகளும் கல்வி வளாகங்களும் விளையாட்டை புதைக்களாமா?
                                               முனைவர் க.கணேசன்,
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்      மாநிலச்செயற்குழு உறுப்பினர்  கன்னியாகுமரி மாவட்டம்.
                                           
                                                 
 
                          

ஆனந்த வெளிச்சம்

                                                   ஆனந்த வெளிச்சம்                                                 
 ஆத்தூரு கிராமத்து மக்கள் காயதிரியையும் ரோஜாவையும் வச்சகண்ணுவாங்காம ஆச்சரியமா பாத்தாங்க ‘இந்தப பெண்களுக்கு இவ்வளவு துணிச்சலா!ன்னு ஒருவருக்கொருவர் பேசிக்கிட்டாங்க.   ரோஜாவும் காயத்ரியும் சிறுவயதிலேயே தன் அம்மா,அப்பாவையும் விபத்தில் இழந்து.  அவர்கள் இருவரும் அனாதை இல்லத்தில் இருந்துதான் வளர்ந்தாங்க படிச்சாங்க.
    இப்போது ரோஜா வானொலி நிலையத்திலும், காயத்ரி பெண்கள் அழகு நிலையத்திலும் வேலைபார்க்கிறதையும். நல்ல சம்பளம் வாங்கி எந்த மாசுமரு இல்லாம யாரோட வாயிக்கும் அவலாக இல்லாம. இருவரும் ஒற்றுமையாக இருக்கிறதப் பாத்து ஊருக்காரங்க பெருமையாக நெனப்பாங்க அந்த ஊரு இளவட்டங்க கூட அக்காங்குற சொல்லுக்கு அடுத்த சொல்லு சொல்லமாட்டாங்க சுத்துப்பட்டு கிராமத்துல இப்படியொரு ஊரும் இல்ல, இவங்களப் போல பெண்களும் இல்ல அவுங்க வேலைக்கு போன நேரம்போக மத்தநேரம் கடைக்கும் வேற எங்க போனாலும் சேந்தே போவாங்க.
    அன்னைக்கு ஆடி பதினெட்டு முன்பெல்லாம் விவசாய மக்கள் இந்த நாளுல ஊரெல்லாம் கூடிக் கொண்டாடி பூமியை சாமியா நெனச்சு கும்பிட்டு விதையை வெதைச்ச  மக்களோட பழக்கம் இப்போது கோயில்ல போயி சாமி கும்பிடுறது. கடலுல போயி குளிக்கிறதுமா மாறிப்போச்சு முத்தம்மா ஆச்சி பதினோரு மணிக்கெல்லாம் ரோஜாவும் காயத்திரியும் வீட்டுக்கு திரும்பிய போது ஊரைக்கூட்டிருச்சு
  முந்துன நாளு இரவெல்லாம் கோயிலுக்கு போற நெனப்புலேயே காயத்திரி உறங்குனா. காலைல ஆறு மணிக்கு       
‘ரோஜா ரோஜா ன்னு குரல்வந்த திசையை பார்த்தா ரோஜா.அவளுடைய அக்கா காயத்ரி கூப்பிட்டா  ‘ என்ன அக்கா ‘ ன்னு கேட்டா.ரோஜா ‘இன்னைக்கு ஆடி பதினெட்டு கோயிலுகுப் போயிட்டு வரலாமா?       
  உடனே ரோஜா ‘சரின்னு  சொனனா
  இருவரும் கோவிலுக்கு சென்றனர். அங்கு விளக்குபூஜை முடிந்து வெளியே வந்த நேரம் அங்கு தள்ளாடும் வயதில் ஒரு கணவன் மனைவி ஜோடி கோயிலின் முன்னே அமர்ந்திருக்க அவர்களின் தட்டில் சில சில்லறைக் காசுகள்.போவோர் வருவோரில் சிலர் காசைப் போட்டார்கள்.சிலர் அவர்களின் கையைத் தட்டிவிட்டு ஏளனமாய் பார்த்துவிட்டு சென்றார்கள்.  இதைப் பார்த்ததும் ரோஜாவுக்கு மனம் தாங்கவில்லை.அவர்களிடம் சென்று அவர்களின் கண்ணீர் கதையைக் கேட்டாள். அவர்களுக்கும் மூன்று ஆண் பிள்ளைகளாம். எல்லோரையும் நல்லபடியாக படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி வைத்து அவர்களின் சொந்த செலவில் கண்குளிர திருமணமும் நடத்தி வைத்தார்களாம். அவர்களும் திருமணமான மறுநாளே தனி குடித்தனத்துக்கு ஆசைப்பட்டு மூவரும் தனித் தனியாக சென்றுவிட்டார்களாம்.அம்மா அப்பாவின் இரத்தத்தை வியர்வையாக சிந்தி வாங்கிய சொத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டனர்.நாங்கள் இப்போது அனாதை என்று சொன்னவுடன் ரோஜாவுக்கு மனது ஒருமாதிரி கணத்தது. ரோஜாவின் கரம் அந்த முதிய கரத்தை இறுக்கப் பிடித்தது.    அவர்களிடம் ரோஜா ‘ எங்க நிலைமயும் உங்கள மாதிரிதான் உங்களுக்கு பிள்ளைங்க உங்களோட இல்லை. எங்களுக்கு அப்பா அம்மா எங்களொடஇல்லை.
    ‘எங்க வீட்டிற்கு வாறீங்களா எங்களுக்கு அம்மா அப்பா கூட வாழ ஆசையாக இருக்குது. அந்த இளைய குரல் கேட்டது.. உடனே காயத்திரி ‘ஏய் ரோஜா ‘ அவுங்களுக்கு பிள்ளைங்க இருக்குது என்னைக்காவாவது ஒருநாள் திருந்தி வருவாங்கநீ வா என்று கையை பிடித்தாள்.அதற்கு ரோஜா கையைத் தட்டிவிட்டுநீ அம்மா,அப்பா முகத்தைப் பாத்து அவுங்க கூட இப்படி ஊர்சுத்தி அவுங்க கையால சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கே ஆனா எனக்கு அந்த குடுப்பன இல்லை. அதுதான் இவுங்களப் பாத்தவுடன நமக்கு ஒரு அம்மா அப்பா வேனும்னு தோனுச்சு. அக்கா நா சொன்னது தப்பா?  உடனே காயத்திரி எல்லாரும் குழந்தைகள தத்து எடுத்து வளப்பாங்க. ஆனா நீ ஒரு தாயையும் தந்தையையும் தத்து எடுக்கலாமுன்னு சொல்லுற.உன்னுடைய இரக்கம் பிடிச்சிருக்கு ‘ என சொல்லி காயத்திரி அந்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டிற்கு அழச்சிகிட்டு போகலாம் என சொன்னதுதான் தாமதம் ரோஜாவுக்கு சந்தோஷம். பெரியவுங்க கண்ணுல ஆனந்தக் கண்ணீர் சொட்டுன்னு விழுந்துச்சு. நாலுபேரும் வீட்டுக்குள்ள நுழையும்போதுதான்  ஊரைக்கூட்டி வச்ச முத்தம்மா ஆச்சி ‘யாரும்மா இவுங்கன்னு கேட்டுச்சு ரோஜா சொன்னா ‘இவுங்கதான் எங்களோட தத்து அம்மா அப்பா நாங்க அவுங்க பிள்ளைங்கன்னு சொன்னதும் ‘நீங்க நல்லா இருக்கனும் உங்களைப் போல நாட்டுல ஆணும் பொண்ணும் இப்படி இருந்துட்டா எங்களப் போல வயசான கிழடுக கோயில குளத்துக்கு எதுக்குத் தாயீ போகணும்.ஒங்க மனசு பெரிய மனசு தாயீன்னு சொல்லி முத்தம்மா ஆச்சியின் கைகள் தன்னையறியாமல் ஒன்றுசேர்ந்து கும்பிட்டது.கூடியிருந்த பொம்பளங்களுக்கும் இந்த பிள்ளைங்களோட மனசு பெரிசாத் தெரஞ்சது.வீட்டுக்கு வந்த முதிய தம்பதிகளுக்கு அவுங்களுக்கு இன்னைக்குத்தான் ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கிற ஆனந்த வெளிச்சம் மனசெல்லாம் ஊடுருவிப் பாஞ்சது.
                                                         யூகோ.ரொஸ்
                                                  வணிகவியல் மூன்றாமாண்டு                  
                                         விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம்                                                 
ஒரு மீனவன் பாடுகின்றான்.
யவ்வனப் பெருங்கடல்
யாருமே அருகிலில்லை
தாவிடும் அலைகளிலே-நான்
தனிமையில் பாடிங்கதை!
துணையெனத் துடுப்பெடுத்துத்
துணிவுடன் அலைகிழிப்பேன்
நிலத்தினில் வாழ்ந்திடவே
நீரினில் வலைவிரிப்பேன்!
கரையினில் நானிருந்தால்-என்
கன்றுகள் பசித்திருக்கும்
கடலினில் இறங்கிவிட்டால்-அந்தக்
கலங்கரை துணையிருக்கும்!
எல்லா ராத்திரிக்கும்
கடுங்குளிர் காத்திருக்கும்-நீரில்
வரும்மீன் மறைந்திருக்க-நூறு
விண்மீன் பூத்திருக்கும்!
நம்பிக்கை மீதுகொண்டு
நானொரு வலவிரிச்சேன்
கடலுல மீன்களத்தான்
கடவுளா நான்நெனச்சேன்!
நண்டுகளே! ஓ நண்டுகளே-தண்ணீர்க்
கூலின் வண்டுகளே!
பாறையில் இருந்தபடி-என்
பாடலைக் கேளுங்கள்!
வேகப் பெருங்கடலில்
வெறித்துத் தவமிருக்கும்
சோகப் பாறைகளே-நான்
சொல்லும்கதை கேளுங்கள்!!
ஒவ்வொரு அலையிலும்-என்
ஊமை உயிர்த்துடிக்கும்
மகனென எனைவைத்து-இந்த
மாகடல் தாலாட்டும்!
ராத்திரி கடல் வானம்
ரம்மியக் காட்சியடா
ரசித்தவன் பாடலின்று
ரகசிய சாட்சியடா!
கடலினில் பாடுவது-தூரக்
கரைதனில் கேட்காது!
கடலினில் மறைத்தாலும்-கரை
காரணம் கேட்காது!
இதுதான் எனது கதை_இதில்
என்றும் முடிவில்லை!
நாளும் நாளும் விடிந்தபின்னும்-அந்த
வானம் எனக்கு விடியவில்லை!
                  ஈ.விஜய், எம்.ஏ கொட்டாரம் த மு எ க ச கிளைச் செயலாளர்