Thursday, January 1, 2015

காலந்தோறும் பெண்கள்மீது படிந்த அடிமைச் சிந்தனைசேறும் சகதியும்

    காலந்தோறும் பெண்கள் மீது படிந்த அடிமைச் சிந்தனை சேறும் சகதியும்
    மனித இனத்தின் மூளை ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்பபுகளையும் ஆற்றல்களையும் பெருக்கியுள்ளது. மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் கணக்கிலடங்கா நுட்பமான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. உணவுப் பொருட்கள் முதல் சகலவிதமான பொருட்களும் எளிமையான உற்பத்தி செய்வதும் நிகழ்கிறது.18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சி பொருளாதார வாழ்முறையை வசதியுள்ளோருக்கு சொகுசாக்கியுள்ளது. மின்னனு பயன்பாடும் கண்டுபிடிப்பும்,விண்வெளி ஏவுகணைகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது.ஆனால் பண்பாட்டு நடவடிக்கைகளாகிய சாதியம்,மூடநம்பிக்கை சோதிடம்,வாஸ்து சாத்திரம், மதவெறி பிற்போக்கு அரசியல் ஆகியவற்றோடு பாலின வேறுபாட்டில் பெண்ணடிமை கூறுகளும் அதே ராக்கெட் வேகத்தில் விரிவடைந்து வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளும் பண்பாட்டு பிற்போக்குத் தனங்களும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் பயணித்து கேவலமான வளர்ச்சி என்றே சொல்லலாம். அதிலும் பெண்கல்வியும் ஆளுமைத்திறனும் அதிகமாகி வந்தாலும் பெண் இனம் சந்திக்கும் அவமரியாதைகளும் ஏராளம் ஏராளம். வீட்டில் குழந்தை முதல் வயோதிக தாய் வரை ஒதுக்கப்படுவது முதல் சட்டமன்ற பாராளுமன்றத்தில் இன்னும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காத தன்மைறயும்,நாட்டளவில் சுயேச்சையாக உயர்ந்த ஆளுமையோடு வளராத தன்மை வரை சமமாக அங்கீகரிக்கப் படாமல் வக்கிரமாகவே நடத்தப்படுவதை அன்றாடம் பார்க்கலாம். இந்த நிலை நிலைத்திருப்பதற்கு மிகப்பெரிய காரணங்கள் பல இருந்தாலும்,காலங்காலமாக மனித சிந்தனை கருத்தாக்கம் பெண்ணினத்தை தாக்கியே விதைக்கப்பட்டு ஆல விருட்சமாக இன்று வரை தழைத்து வளர்கிறது. பூமியில் பெண் பற்றிய எதிர்மறை மதிப்பீடுகள் நிலைத்திருப்பதற்கு அவள்மீது வீசிய சேறும் சகதிகளைப் பார்ப்போம்.
மநுதர்மம் வீசும் சகதி;
                 ‘பெண்கள் கேவல புத்தி உடையவர்கள்!  பொய்யைப் போல அருக்கானவர்கள்! பெண்ணுக்கு வெள்ளை உள்ளமும் இல்லை! பெண் பிறவியைத் தூயமையாக்கும் செயல்பாடுகள் எதுவம் இல்லை; மந்திரமும் இல்லை; அவர்களுக்கு பெற்ரோர்களின் சொத்தில் உரிமை ஏதுமில்லை! சடங்கு ஆசாரங்களில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை! பெண் தனது கணவனுக்குப் பணிவிடைகள் செய்து அவனைப் பேணுவது ஒன்றுதான் அவளது மோட்சத்திற்குரிய வழியாகும்! மனைவியைக் கணவன் மற்றொருவனுக்கு விற்பதற்கு உரிமை உண்டு. குழந்தை இல்லாத பெண்ணையும்,அடிக்கடி பிள்ளை இறக்கக் கொடுப்பவளையும் கணவன் விலக்கி விடலாம்! அவளுக்கு பணம் பொருள் உதவிகள் (ஜீவனாம்சம்) ஏதும் செய்ய வேண்டியதில்லை! கணவன் மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு சென்றுவிட்டால், மனைவி மூன்று வருடம் பொறுமையோடு இருக்கவேண்டும். அதன்பிறகு அவனது இருப்பிடம் தேடிச் செல்லலாம்! அப்பன் இன்னார் என்று அறியாத பெண்ணையும் உடன் பிறந்தான் இல்லாத பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது!; என்று மநுதர்மம் விஷக் கொடுக்குகள் பெண்மீது பாய்ந்திருக்கின்றன. (அத்தியாம் 4ல் 36, 37ஆம் விதிகள்,அத்தியாயம்10ல் 27, 35, 38,52,68ஆம் விதிகள்,அவள்மீது அடிமைச் சகதிகளை வாரி இரைத்திருக்கிறது. இவற்றின் தாக்கத்தினால்தான் இன்னும் இச்சமூகம் பெண்ணை ஒரு போகப் பொருளாக கவர்ச்சி பொம்மைகளாக மதிப்பிட்டு வருகிறது.
     ‘இளமையில் தந்தையை பருவ காலத்தில் கணவணை முதுமையில் மைந்தனையும் சார்ந்திருத்தல் வேண்டும்.மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருத்தல் கூடாதவராவர்’
     ‘படுக்கை ஆதனம் அழகுசெய்தல் காமம் சினம் பொய் துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்’ மனமொழி மெய்களால் கணவனின்படி கடவாத பாவை இம்மையில் மேலோரால் கொண்டாடப் பெற்று மறுமையில் கணவனுடன் நல்லுலகம் சேர்கின்றான். படி கடக்கும் பாவி உலக நிந்தை பட்டுழன்று பின்னர் நரியாய் பிறந்து நரியாவாள்’
    இன்னும் ஏராளமான விதிகளை மநு விதித்திருந்தாலும் இவற்றை மட்டுமே இப்போது சமூக நடப்பில் ஒப்பிட்டு பெண்களின் ஒவ்வொரு நிலையிலும் உற்றுநோக்கும் யாருக்கும் அவர்களுக்கு நேர்ந்திருக்கும் அவலங்கள் அடிமைத்தனங்கள் தானாக வந்தவைகள் அல்ல என்பது புரியும். பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் மநு
ஆண்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லையே.
    டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மநுதர்ம நூலை எரித்தது சாதீயப் பாகுபாட்டை வளர்க்கும் வருணாசிரம தத்துவத்தை மண்ணில் விதைக்கிறது என்பதற்கு மட்டுமல்ல ,பெண்ணை படு கேவலமாக நடத்தும் விதத்தில் அவர்கள்மீது சேற்றை வாரி வீசுவதாலும்தான் என்பது புரிகிறது.

மதங்களின் பங்கு;
மக்கள் எதோவொரு மதத்தில் பிணைந்திருக்கிறார்கள்.பிரதான மதங்கள் பெண்களை இரண்டாம் நிலையில்தான் வைக்கின்றன.அவைகளில் அடங்கியிருக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் பெண்ணை ஓரங்கட்டுவதாகவே இருக்கும்.பெண் பூப்பெய்தலும்,மாதவிடாய் காலமும்,குழந்தைபெறுதலும் அறிவியல் பூர்வமான சந்ததி விருத்திக்கு அடையாளங்காட்டும் அற்புத நிகழ்வுகளை தீட்டு என்று பிரகடனப்படுத்தி வீட்டைவிட்டும் ,ஆலயங்களை விட்டும் அப்புறப் படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது.தந்தை அய்யா வைகுண்டர்,பெரியார்,முற்போக்கு இயக்கத்தாரின் பெண்ணுரிமை இயக்கத்தாலும்,  படிப்பும் அரசுப் பணிகளும் பெண்களுக்கு வாய்த்த காரணத்தாலும் ஓரளவு மாற்றம் இருந்தாலும் இன்னும் தூரம் கடக்கவேண்டிய அளவு துடைக்கவேண்டிய மதங்கள் வீசிய சகதிகள் ஏராளம் படிந்திருக்கின்றன.

புராணங்களும் இதிகாசங்களும்.
. புராணங்களிலும் இதிகாசங்களிலும் பெண்ணுக்கு சம அந்தஸ்து வழங்கப்படும் கருத்தாக்கங்களை பூதக் கண்ணாடி வைத்துத்தான் பார்க்கவேண்டும். நிலவுடைமைச் சமூகத்தில் பிறந்த சிலப்பதிகாரத்தில் எக்காலத்திலும் பெண்கள் அதிர்ந்து பேசக்கூடாது என்று போதித்து அடித்து இறுத்தி வைக்கப்பட்ட காலத்தில் கண்ணகியை எழுச்சநாயகியாக ‘தேரா மன்னா!....என் கணவன் கள்வன் இல்லை என்று கோபக்கனலை வீசச் செய்திருப்பது மிக பிரமாண்டமானது என்றாலும் காவியத்தின்மூலம் மேலோங்கி பரப்பியது எதை? கற்பைத்தானே? ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமன் சீதாதேவியை தீயில் இறக்கிய சோதனையாகட்டும், மகாபாரதத்தில் பாஞ்சாலியை சூதாட்டப் பொருளாக வைத்ததாக இருக்கட்டும், இவையெல்லாம் கதைப்பாடல்கள் மூலமாக கிராமங்களில் பவனி வந்த காலம் முதல் நாடகங்கள் ,திரைப்படமாக வளர்ந்த காலம் வரை மக்கள் மனதில் அலைவீசக் கொண்டிருந்தவை சிந்தனையில் பதியாமல் இருக்குமா?
  அரிச்சந்திர புராணம் நாடகம் மூலம் உண்மையின், சத்தியத்தின் புருஷனாகவே இந்தச் சமூகம்(மகாத்மா காந்தி உட்பட)உயர்வான எடுத்துக்காட்டாக நினைத்தது. நாடகத்தையோ கதையையோ சினிமாவையோ வர்க்கபேதக் கண்ணோட்டத்தில் பார்ப்பது எத்தனைபேர்? அதிகம் இல்லையே. தந்தை பெரியார் இந்த நாடகத்தையும் பகுப்பாய்வு செய்கிறார். ‘இதிலுள்ள தத்துவங்களாகிய பெண் அடிமை,பிறவித் தீண்டாமை,பிறவி வருணாசிரமப் பிரிவு, சாதிபேத உயர்வுதாழ்வு, வைதீகர் ஆதிக்கம்,மூடநம்பிக்கை, முதலாளி தொழிலாளி கொடுமை,எஜமான அடிமைத் தன்மை முதலியவை மிதந்து நிற்கின்றன’ என்று நமக்கு பாடம் எடுக்கிறார்.
    கம்பராமாயணம் ஒரு அருமையான காவியம். ஒரு மனிதனுக்கு பலம் பலவீனம் இருக்கும் என்பதை வலியுருத்துகிறது.கம்பனுக்கோர் கேள்வி எனும் கவிதையில்
 'ராப்பகலா பாட்டெழுதி ராசகவி ஆனவனே
 உன்னை இதுவரைக்கும் ஒருவார்த்தை கேட்டதுண்டோ?
அம்பிகாவதி அழ அமராவதி உன் காதில் வந்து சொல்லியழ
கம்பா நீ அழுத கணக்கிங்கே காட்டலையே
தெய்வக்காதலை நீ தினந்தினம் பாடினியே 
மனிதக்காதலை நீ மரியாதை செய்யலையே!' என்று வடிக்கிறான்.
சோசலிச பூமி எப்படி இருக்கும் என்பதை அன்றே காவியத்தில் காட்டியவன்.
இப்படிப்பட்ட காவியத்தில்  அனுமன் அசோகவனத்தில் சென்று சீதையைப் பார்த்துவிட்டு வருகிறான்.ராமனை அனுமன் என்ன சொல்வானோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அனுமன் சொல்கிறான்
கண்டேன் கற்பினுக்கணியை கண்களால்
தெண்டிரை இலங்கை தென்னவர்
அண்டர நாயகா இனி துரத்துக ஐயம்' என்றும்
 விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தலாய
நங்கையைக் கண்டனல்லேன்
இப்பிறப்பென்பதொன்றும்
இரும்பொறை யென்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றில்
களிநடம் புரியக்கண்டேன்' என்று பாடும்போது இங்கே சீதை கற்போடு இருக்கிறாள் என்று சொன்னவுடன் ராமன் மனது எப்படிப் போயிருக்கும். ஆக இங்கே சீதை கற்புடன் இருக்கிறாள் என்று சொல்லவேண்டிய சூழல்.

விவேகசிந்தாமணி வீசிய சகதி
  ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
  ஆலகால விஷத்தையும் நம்பலாம்
  கோலமா மத யானையையும் நம்பலாம்
  கொல்லவிரும் வேங்கையையும் நம்பலாம்
  சேலை கட்டிய மாதரை நம்பினால் –தெருவில்
  திண்டாடித் தவிப்பரே’ என்று  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மிக அழுத்தமான சண்டையை, விரசலை உருவாக்குகிறது விவேகசிந்தாமணி கவிதைத் தொகுப்பு. இப்போதும் இம்மாதிரி கருத்து மக்களிடையே நிலவி வருவதையும் வெளிப்படையாகவே பார்க்கமுடியும்.
வள்ளுவம் கூட அதன் பங்குக்கு வீசியவை;
   அறம் பொருள் இன்பம் ஆகியவற்றின் அடித்தளத்தில் சமூகத்தின் சகலவிதமான நடவடிக்கைகளையும் கூர்ந்து ஆராய்ந்து மனித சமுதாய மேம்பாட்டுக்கு நெறிமுறைகளை அள்ளிக் கொடுத்த மாமனிதர் பெண்கள் விஷயத்தில் மட்டும் சறுக்கிய பலவீனமும் சமூகத்தின் புறச்சூழல் அவரையும் தடுமாற வைத்துவிட்டதோ என தோன்றுகிறது.
    ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
     திண்மை உண்டாகப் பெறின்.’
    ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
     பெய்யெனப் பெய்யும் மழை’
உலகத்தின் மேலே உயர்ந்து நிற்கும் வள்ளுவர் கூட கற்பைப் பற்றி பேசுவது நெருடலாகத்தான் உள்ளது. தமிழ் இலக்கியத்தின் முன்னத்தி எரிடமே பலவீனம் வந்தால் பின்னத்தி ஏர்கள் சலனப்படத்தானே செய்யும்?
நாட்டார் சொலவடைகளில் அடிமைத்தன கூறுகள்;
“அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’
‘பொம்பள சிரிச்சா போச்சு
புகையில விரிச்சா போச்சு’
‘சனியன் பிடிச்சவ சந்தைக்கு போனாலும்
அருகம்புல்லு அஸ்தமிச்சு போச்சாம்’
‘ஏர்பிடிச்சவன் என்ன செய்வான் –எல்லாம்
பானைபிடிச்சவ பாக்கியம்’
யாராருக்கு என்ன வேலை என்பதை அழுத்தமாகவே பிரிக்கப்பட்டதைப் பாருங்கள்.
‘அம்மா பாக்கியம் சம்பா வெளஞ்சது
பாவி பாக்கியம் பதறா போச்சுது’
ஒதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தா
துடைகாலி வந்தாள் எல்லாம் தொடைச்சுப் போச்சி’;
‘மூதேவி முகங்கழுவப் போனாளாம்
மூணுகெணறும் பாழுங் கெணறாப் போச்சு’
ஆக்கங்க கெட்ட அக்கா மஞ்சளரச்சாலும்
கரி கரியா வரும்’
‘மானங்கெட்டவ புள்ள பெத்தா
மருந்தரைக்க அம்மி இல்ல’
‘வெட்கங்கெட்டவ புள்ள பெத்தா
வென்னி வைக்க பான இல்ல’
‘வெளங்கா முகரி வேலைக்கு போனாலும்
வேலை கெடைச்ச பக்கம் கூலி கெடைக்காது’
‘வாக்கப்படுறேன்னு வாங்கித் தின்னுபுட்டு
வைகாசி மாதம் கைய விரிச்சுப்புட்டா’
‘தாயி எட்டடி பாஞ்சா
குட்டி பதினாறு அடிபாயும்’
‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’
‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’
‘முண்டச்சி வளத்த பிள்ளைக்கு
முள்ளிக்கா தண்டி கொழுப்பு’
‘ஆணா பிறந்தா அருமை
பெண்ணாப் பிறந்தா எருமை’
‘வீட்டுப் புருஷனை வெளக்கமாத்தால அடிச்சுப்புட்டு
காட்டுப் புருஷனை கையெடுத்து கும்பிட்டாளாம்’
மக்களிடையே பேசப்படும் சொலவடை சமுத்திரத்தில் ஒரு துளியானவையே மேற்கண்ட சொலவடைகள் இவைகள் பெண்ணுக்கு பெண்ணே சொல்லிக்கொள்பவைகளாக இருந்தாலும் பெண்சார்ந்தே ஏதாவதொரு பாகுபாட்டுக் கூறுகள் இருப்பதைப் பார்க்கலாம். கிண்டலும் கேலியாக இருந்தாலுமே அவைகள் ஒருவிதமான சீண்டல், பாகுபாடு இருப்பதைக் காணலாம்.இவையெல்லாம் பெண்பற்றிய பாகுபாட்டுச்  சிந்தனை காலங்காலமாக பதிந்தவைதானே?
திரைப் பாடல்கள் பெண்ணின் மீது வீசியவை;
  திரைப்படக் கவிஞர்கள் படத்தின் இயக்குநர் வேண்டுகோலுக்கிணங்க கதைக் களத்திற்கு தக்கபடி எழுதுவதுதான் என்றாலும், பல படங்களில் கதைக்கருக்களே பெண்ண்டிமைக் கருத்துகளை கொண்டவையாக இருக்கும். ஆனால் அப்படங்களில் வரும் பாடல்கள் தினந்தோறும் கேட்டு ரசிக்கக்கூடிய அம்சங்கள் கொண்டவைகளாக மாறும்போதுதான் மக்களின் சிந்தனையில் பெண்ணடிமை கருத்துகள் ஏறி உட்காருகின்றன.பல பாடல்களே கலாச்சார நடவடிக்கைகளில் நேரடி பங்கு செலுத்துகின்றன.
திருமண இல்லங்களில் மணமகன் தாலி கட்டியவுடன் ஒலிபெருக்கிக் காரர் சற்று அயர்ந்து விட்டாலும் மணமக்கள் வீட்டார் அந்த பாடலை போடச் சொல்வார்கள்.
  ‘புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே தங்கச்சி கண்ணே –சில
  புத்திமதிகளை சொல்லுறங்கேளு முன்னே’ என்ற பாடலும்
மாலநேரத்தில் மணமகன் வீட்டுக்கு மணமக்கள் வரும்போது
ஒலிக்கக் கூடிய பாடல்
   மணமகளே மருமகளே வா வா-நீ
   வலது காலை எடுத்து வைத்து வா வா’ இதுவாகத்தான் இருக்கும்.
‘பழகத் தெரியவேணும் –உலகில்
பார்த்து நடக்கவேணும்-பெண்ணே
பழகத்தெரி வேணும்

‘கடு கடுவென முகம் மாறுதல்
கருநாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரை
புன்னகையால் வென்றிடவே
பழகத் தெரியவேணும்’

பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக
பழகத் தெரியவேணும்’ என்று பி பி சீனிவாஸ் இனிமையான குரலில் தவழ்ந்து வந்த பாடல் தவறியிம்கூட அநியாயமாக இருந்தாலுங்கூட
பெண்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்பதுதானே? புத்திமதியெல்லாம் பெண்களுக்குத்தானே? ஆண்களுக்கு இல்லை.
   ‘சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில்
   தெருவில் திண்டாடித் தவிப்பரே’ விவேசிந்தாமணி கவிதை போல
இந்தக் காலத்தில்
 ‘ இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
   புருஞ்சுப் போச்சுங்க-அவுங்க
  கண்ணு நம்ம கல்லறைன்னு
  தெரிஞ்சு போச்சுங்க’ என்று பாடல் வருகிறது.
‘தேவதாஸும் நானும் ஒரு சாதிதானடி ‘ என்ற பாடல் தொடங்கி இப்போது
பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே’
‘அத்தான்னு சொல்லி நடப்பா
ஆசையக் காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா
ஆளையே மாத்தி
நம்பிவிடாதே பெண்ணை நம்பிவிடாதே’ என்று காலம் மாறிக்கொண்டிருந்தாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை ஏராளமான திரைப்பாடல்கள் வந்து மக்களின் மனதில் பழைய அடிமைத்தன சிந்தனையை நிலைநிறுத்தி வைக்கின்றன. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற படத்திற்கு கவிஞர் உடுமலை நாராயணகவி மிகப்பெரிய கற்பு தத்துவத்தை உதிர்த்திருப்பார்
‘புருஷன் உயிரை மீட்டுத்தந்தவ பொண்ணுதான்-அங்கே
போற பொழுதை நின்னுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்-இவங்க
ஆஸ்தி கணக்கை சொன்னா கற்பு ஒன்னுதான்’
எமனோடு போராடி கணவன் சத்தியவானின் உயிரை மீட்டுத்தந்தவள் சாவித்திரி காரணம் கற்பு.சூரியனை தடுத்து நிறுத்தியது நளாயினி
குஷட்டம் வந்த கணவணை வேறு பெண் வீட்டிற்கு கூடையில் சுமந்து கணவன் பேச்சை தட்டாமல் செய்து கற்பை காத்ததால் சூரியனை நிறுத்தமுடிந்திருக்கிறது. கண்ணகி கற்பை பராமரித்த காரணத்தால்தான் பாண்டிய நெடுஞ்செழியன் மனைவியோடு நீதி தவறியதால் இறந்தார்கள் .இப்படியெல்லாம் பாடல்களுக்குள்ளே பெண்ணடிமை கருத்துகளை விதைத்த தன்மை மக்கள் மனதிலே ஒரு ஓரத்தில் பதியத்தான் செய்யும்.
   இவற்றுக்கு எதிராக பெண்களை உயர்த்தி உரிமை கொடுத்து கம்பீரமாக வர்ணித்த பாடல்களும் கதைகளும் வரத்தான் செய்தன. ஆனால் அவைகள் குறைவாகவும் எதிரான கருத்துகள் மிக அதிகமாக பரவி வந்துள்ளன.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூக அமைப்பில் சமத்துவ கருத்துகள் மக்களிடம் எடுபடுவதில்லை. எல்லா கவிஞர்களும் மக்கள் கவி பட்டுக்கோட்டையாரைப் போல இருப்பதில்லை. ஓரிரு பாடல்களைத் தவிர
எந்தப் பாடலும் பெண்ணைத் தாக்கியே இருக்காது.  ஒரு பாடல் பெண்ணைத் தாக்கி எழுதியமைக்காக தோழர் பாப்பா உமாநாத் அவர்கள் கண்டித்த காரணத்தால் அன்றிலிருந்து பெண்ணைத் தாக்கி பாடல் எழுதவே இல்லை என்ற வைராக்கியத்தை நாம் பார்க்கவேண்டும்.
திரைப்படம் மிகப்பெரிய ஊடகம்.இந்த ஊடகமே மக்களின் கருத்தைக் கட்டமைக்கிறது.எனவே பெண்கள் மீது திரை இயக்குநர்களின் ஆலோசனைப்படியே நல்ல கவிஞர்கள்கூட வழுக்கிவிழும் அபாயங்கள் நிறையக் கவிஞர்களிடம் பார்க்கலாம்.
    காலந்தோறும் வீசப்பட்ட அடிமைச் சகதிகளை துடைக்க அய்யா வைகுண்டர்,முப்பெருங் கவிஞர்கள் வழித்தடத்தில் பயணிக்கும் இன்றைய முற்போக்கு உழைப்பாளி கவிஞர்களின் பேனா சுழன்றடிக்கத்தான் செய்கின்றன.ஆனால் சமூகத்தை யார் மேலாதிக்கம் செய்கின்றனரோ அவர்களின் பரப்புரையே வாழ்க்கைப் பண்பாடாக மாறி மாறி நிலைபெறுகிறது.ஆண் பெண் சமத்துவ பரப்புரை இக்காலத்தில் வெறும் போதனையாக மட்டும் இருந்தால் போதாது ஒவ்வொருவரின் குடும்பம் முதல் நாடு வரையிலான செயல் முறைகளில் நடைமுறைப் படுத்தவதே பெண்கள் மீது வீசிய சேறும் சகதியும் துடைத்தெறிய முடியும். உண்மையான மக்கள் வரலாறையும் பண்பாட்டையும் மறைத்துவிட்டு ஒற்றைக் கலாச்சாரத்தை குதூகலத்தோடு உயர்த்திக்கொண்டு கோலோச்சும் இக்காலகட்டத்தில் காலந்தோறும் மாறாமல் பெண்கள்மீது படிந்திருக்கும் அடிமைச் சந்தனை சேற்றையும் சகதிகளையும்  துடைக்கவேண்டியது முற்போக்காளர்களின், சமூக ஆர்வலர்களின் மனித நேயங்கொண்டோரின் அவசரக் கடமையே!
 
  





1


No comments:

Post a Comment