Tuesday, January 8, 2013

வீதிகள்-கல்வி வளாகங்கள் விளையாட்டைப் புதைக்கலாமா?


         வீதிகள்-கல்வி வளாகங்கள் விளையாட்டை புதைக்கலாமா?
          ‘நாந்தா ங்கொப்பண்டா நல்லமுத்தன் பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரண்டா-தங்கப்பிரம்பெடுத்து தாலி கட்ட வாரண்டா---வாரண்டா  கபடி கபடி கபடி என்று சிறுவயதில் விளையாடிய நினைப்பு ஒருபுறம். ‘ ஓடி விளையாடு பாப்பா-நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாஎன்ற பாடலை நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பாட்டுப்போட்டியில் பாடி பரிசு வாங்கிய நினைப்பு இன்னொருபுறம். இப்போது பாப்பாக்களையோ ஆண்குழந்தைகளையோ இரண்டாண்டு முடிந்த்துமே பக்கத்திலிருக்கும் கான்வெண்டு பள்ளியில் தொட்டிலைக் கட்டிப்போட்டுவிட்டு ஆங்கில ரைமே தாலாட்டாக மாற்றி விளையாட்டுக்கு முழுக்குப்போடும் விபரீதம் தொடங்கி ‘மார்க மார்க் மார்ககுழந்தை இரவில் கனவில் தமிழில் கத்தும் நிலைக்குத் தள்ளிவிட்டதை பாப்பாக்களுக்கு பதினாறு வகையான வாழ்க்கை மற்றும் தேசப்ற்றுச் சிந்தனையை அப்பாடலில் அள்ளித் தெளித்த பாரதி இன்றிருப்பானேயானால் மதம்பிடித்த யானையால் வீசியெறியாமலே மீண்டுமொருமுறை மரணத்தை வரவழைத்திருப்பார். ( அவர் எத்தனை முறை மரணித்தாலும் எவராலும் அவரை எரிக்கவோ புதைக்கவோ முடியாது காரணம் அவர் இறந்தால்தானே?என்பது வேறு விஷயம்)
    தமிழகத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் வீடுகளில் ஒட்டுத்திண்ணைகளின் பார்வைகளோடு மாலை நேரங்களிலும் இரவு பத்துமணிவரை கதைகள் சொல்லி, ‘பல்லாங்குழி ஆடி கபடியில் கொண்டாடி, பெண்களின் கும்மியாட்டத்தில் குதூகலித்த வீதிகள் வரலாற்றுக் கண்காட்சிக் கூடங்களில் மட்டும் பார்க்கமுடியும். இந்தப் பண்பாடு தொடரவேண்டும் என்பதற்காகவோ என்னவோ பாண்டிச்சேரி அரசு, அங்கு வீடுகளை ஒட்டுத்திண்ணையோடும் பாரம்பரிய பண்பாடோடும் வீடுகட்டினால், அவ்வீட்டு உரிமையாளருக்கு ஆண்டுதோறும் ரூ 10000 வழங்கப்படுகிறதாம்.தமிழகத்தில் இந்த மாதிரித் திட்டம் வந்தாலும் கிராமியக்கதையில் வரும் (சமீபத்தில் வடிவேல் காமடியாக திரைப்படத்தில்)கடன் வாங்கி வெட்டிய கிணறு காணாம்ல் போன மாதிரி பண்க்கணக்கு கச்சிதமாக இருக்கும். இப்படி நம்ம ஊர்களின் வீதிகளும் வெறிச்சோடிப் போனது. அழுகும் குழந்தையை வீதிக்குத் தூக்கி வந்து’’நிலா நிலா ஓடிவாபாட்டுப் பாடியோ அல்லது பாடாமல் நிலவைக் காட்டியோ சோறு ஊட்டிய தாய்மார்கள் இன்று வீட்டுக்குள்ளேயே ‘அந்த அஜித்தப் பாரு, அந்த ஆண்டியப் பாருஎன்று டிவிப் பெட்டியக் காட்டி சோறு ஊட்டும் எந்திரயிக தாய்மார்களாக மாறிவிட்டார்கள் என்பது சோகமே.
    ஏக்கர் கணக்கான நிலத்தில் மலையடிவாரங்களிலோ,சமவெளிகளிலோ  கட்டப்பட்டிருக்கின்ற மெட்ரிகுலேசன் பள்ளி, கலை அறிவியல் கல்லூரி,பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்களின் போது மட்டும் புதுப்பெண்,புதுமாப்பிள்ளை அலங்கரிப்பில் மின் ஒளியில் ஒருநாள் மட்டும் சடங்குக்காக அல்லது தரச் சான்று கொடுக்கும் குழுவின் மதிப்பீட்டுக்காக மினுங்கிவிட்டு மறையும். உள்ளூர் விளையாட்டுகளெல்லாம் ஓடி மறைந்து கிரிக்கெட் மட்டும் கொஞ்சம் இளைஞர்களிடம் குதியாட்டம் போடுகறது. அதுவும்கூட மார்க், வேலை, இண்டர்வியூ கனவில் கூடவே கிரிக்கெட் மட்டை வைத்திருந்த கைகள் செல்போன் வைத்துக்கொண்டு காதுகள் போன் தொடர்பில் திரைப்பாடல்கள் ரசிகக்க வைப்பதால் குறைந்து வருகிறது.  
 ஏதோ சில ஊர்களில் பழைய பார்பரியத்தின் எச்சங்களாக பொங்கல, தீபாவளி,கிறிஸ்துமஸ் விழாக்களின்போது சில விளையாட்டுகளை ஆடி நினைவு படுத்துகிறார்கள்..
     விளையாட்டு கலை இலக்கிய உறவுகள் மூலம் மாணவ மாணவியரை மனிதர்களாக செதுக்கி தேசத்தை நிர்மாணிக்கிற நாளைய தலைவர்களாக மாற்றவேண்டிய ஆரம்ப, நடுநிலை உயர்நிலை மேல்நிலை கல்லூரி கலவித்திட்டங்கள் அரசின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டே அவர்களின் உடலின் உறுதியை சிந்தனையின் ஆற்றலை முடமாக்குவது நியாயமாகுமா?அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களே பல மடங்கு அதிகமாகி கல்வி வியாபாரத்தை உறுதி செய்து விளாட்டுக்கும் கலை இலக்கியத்துக்கும் விடை கொடுத்தபின்பு எஞ்சியிருக்கும்  எண்ணிக்கையில் குறைந்துபோன உதவி பெறும் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் தனியார் கல்வி வியாபார மேலாண்மைக்கு இரையாகிப்போகும் விபரீதம்தானே அரங்கேறும்.!
          'காலை எழுந்தவுடனை படிப்பு-பின்பு
           கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
           மாலை முழுதும் விளையாட்டு-என்று
           வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா' என்று பாரதி ஒரு கால அட்டவணை கொடுத்ததை இளமை ரத்தம் ஒடும்போதாவது பழக்கப் படுத்துவது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இதனை மனதில் இறுத்திக் கொண்டு,    அனைத்து பள்ளி கல்லூரிகளிலும்,அனைத்து பாடங்களுக்கு பாடவகுப்பு இருப்பது போல அதிகமான விளையாட்டு ஆசிரியர்களை நியமனம் செய்து, அனைத்து மாணவ மாணவிகளும் தினமும் ஒருமணி நேரம் ஓடி ஆடி விளையாடும் பாட வகுப்பில் கட்டாயமாகப் பங்கேற்கச் செயவது ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பதோடு அறிவை விருத்தி செய்ய உடல் உரம்பெறும். இல்லையேல் ஏதோவொரு பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைக்கு இட்டுச் சென்று உடல் விளையாட்டுகளை ‘ அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்குமடி நாளை என்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படத்திலோ, ‘வெண்ணிலா கபடிக்குழு ‘ திரைப்பட பார்க்க முடியுரே தவிர நிஜத்தில் ஆண் பெண் புஜங்களை உயர்த்திசமூகப் புத்திக்கு சாணை தீட்டி நாளைய உலகை தோளில் சுமக்க வைக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் நம் நாடு பதக்கங்களை வாங்கி குவிக்காவிட்டாலும் உடலும் உள்ளமும் மனிதப் பண்பும் ஆரோக்கியத்தை தரிசிக்கும். இத்தன்மை வாய்ந்தவைகளை வீதிகளும் கல்வி வளாகங்களும் விளையாட்டை புதைக்களாமா?
                                               முனைவர் க.கணேசன்,
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்      மாநிலச்செயற்குழு உறுப்பினர்  கன்னியாகுமரி மாவட்டம்.
                                           
                                                 
 
                          

No comments:

Post a Comment