Wednesday, June 17, 2015

தென் முனைச் சூரியன் அய்யா வைகுண்டர்

                    தென்முனைச் சூரியன் அய்யா வைகுண்டர்
 முன்னுரை;
         இந்திய சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புத்தர், மகாவீரர் போன்ற மகான்களுக்கு இணையாக இந்தியாவின் தென் முனையில் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சமத்துவ சிந்தனையை பரப்பியதோடு, சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்றுபடுத்தி,உத்வேகப்படுத்தி,சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,சனாதன வைதீக மதத்தின் பாகுபாட்டுக்கு எதிராகவும் ஆதிக்க சாதி மற்றும் மன்னனின் பொருளாதார சுரண்டலுக்கெதிராகவும் மக்களை நிமிரச் செய்த மகான் அய்யா வைகுண்டர் ஆவார்.
   தமிழகத்தில் முதல் சமூக சீர்திருத்த மகான் என்றால் மிகையாகாது.
அவர் உருவ வழிபாட்டை ஒதுக்கித் தள்ளியவர் மட்டுமல்ல, தனது பக்தர்களுக்கு தனது உருவத்தைக் கூட உருவகப் படுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. எனவேதான் அவர் தத்துவமும் நடைமுறை செயல்பாடுகளும் ஏராளமான சிந்தனையாளர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
 இந்திய சமூக அரசியல் சிந்தனைவாதிகள் நீண்ட காலத்துக்கு முன்பே அய்யா வைகுண்டர் சிந்தனைகளை சமூக முழுமைக்கும் எளிய நடையில்
உழைக்கும் மக்களுக்கு புரியும்படியாக பொருத்தியிருப்பார்களேயானால்,நவீன இந்தியாவின் சமூக மதிப்பும் சகலவிதமான போக்குகளிலும் பௌர்ணமியாக ஜொலித்திருப்பதோடு,குறந்தபட்சம் தமிழகம் பண்பாட்டுத் தளத்தில் நமது அண்டை மாநிலமான கேரளத்தைப் போலாவது மாற்றத்தை எட்டிப்பிடித்திருக்கும். அய்யாவின் சமத்துவ சமாஜம், சமபந்தி போஜனம், தொட்டு நாமம் போடுங்கோ ஆகிய செயல்பாடுகளில் அடங்கியிருக்கும் சமத்துவம் சமூக ஒற்றுமை அடங்கிய தத்துவமும் நடைமுறையும் இந்திய மக்களிடையே வளர்ந்திருக்கும். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரந்த சிந்தனையில் சமூக மாற்றமோ, விடுதலையோ அடைவதற்கு தங்களை தியாக வேள்வியில் மூழ்கடித்துக்கொண்ட மகான்களை சாதிக் கூண்டுக்குள் அடைத்தது போலவே, நாடார் இனத்தில் பிறந்தார் என்பதற்காக அவரின் சொல்லும் செயலும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனத்திற்கெதிராக கலகக் குரல் கொடுத்தும், தன்னையே அர்ப்பணித்த அய்யா வைகுண்டரையும் ஒரு சாதி வளையத்தில் அடைத்துவிட்ட வேதனைதான், தெற்கே புறப்பட்ட பகலவனின் கதிர் வீச்சு நாடுமுழுக்க வீசாமல் மூடநம்பிக்கை ,சாதிவெறி மதவெறி சாக்கடையிலிருந்து மீண்டெழ முடியாமல் நாடு தத்தளிக்கிறது. “அட இப்பவெல்லாம் எவண்டா ஜாதி பாக்குறான்னு
அப்பாவியாகவே பேசுறான்-நாட்டு
நெலமையத் தலைகீழாப் பாக்குறான்-சொந்த
ஜாதிக்குள்ளேயே கல்யாணம் பண்ணிகிட்டு
ஜாதியில்லேண்ணு பீத்துறான்.

பட்டிக்காட்டுல் பளிச்சுன்னு தெரியுது
வெட்டறிவால ஏந்தி அலையுது- அட
பட்டணத்திலேயும் பம்மித் திரியுது
தகுதி திறமையின்னு பசப்பித் திரியுது
தொட்டிலிலே யிருந்து சுடுகாடு வரைக்கும்
தொரத்தும் பீடைச் சாதியடா-அட
எப்பவாச்சும் விட்டுத் தொலைச்சியா
வெத்துச் சவடால் ஏதுக்கடா’ என்று கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் பாடல் வரிகள் சமூக உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுவது மனிதநேயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கிறது.
  கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரையே கடவுளாக்கிய தேசம்தானே இது. காலம் கடந்துபோனாலும் நாடுமுழுக்க ஜாதிக் கொடுமைகளும்,
கௌரவக் கொலைகளும்,மதவெறி சிந்தனைகளும்,மூடநம்பிக்கையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டுதான் இருக்கின்ற சமூகச் சூழலில் அய்யாவின் சிந்தனைகளை, அகிலத்திரட்டு உலக மகா இலக்கிய அற்புத பொக்கிஷமான சமத்துவ சிந்தனையை மறுவாசிப்பு செய்து மக்களில் புதுமானுடச் சிந்தனையை கட்டியெழுப்புவதற்கு,  அய்யா வைகுண்டர் போல மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற செயல் சிந்தனைகளை ஆய்வுசெய்து அசைபோட்டு,அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்லவர்களிடம் அவர் செய்த களப்பணியைத் தொடரவேண்டும் என இருகரம் நீட்டி கூவி அழைப்பதற்காகத்தான், தீண்டாமையின் அத்தனை வடிவங்களையும் தாங்கி, ஜீரணித்து, வாழ்க்கையின் கல்லிலும் முள்ளிலும், கரடு முரடான பாதையிலும் பயணம் செய்து, இன்னும் இந்த தேசத்தில் சமத்துவம் சகோதரத்துவம் மலராதா என்ற ஏக்கத்தோடு அலைகின்ற நான் அய்யாவின் வாழ்க்கையை உங்களிடம் பரிமாறுகிறேன்.
      பகவத்கீதையில் கிருஷ்ணனின் அறிவுரை;
நால்வருண முறையை உருவாக்கியவன் நான்தான்.அவர்களுடைய இயற்கை திறமைகளுக்கேற்ப மாறுபட்ட தொழில்களை நிர்ணயித்தவனும் நான்தான்.
மற்ற வர்ணத்தொழிலை செயவது சுலபமானது என்ற போதிலுங்கூட தன் சொந்த வர்ணத் தொழிலைச் செய்வதே பாராட்டுக்குரியது.தன் வர்ணத் தொழிலை திறமையாகச் செய்ய இயலவில்லை என்ற போதிலுங்கூட அதையேதான் செய்யவேண்டும்.தன் சொந்த வர்ணத் தொழிலைச் செயவதினால் மரணம் நேரிடும் என்ற போதிலுங்கூட அதைச் செய்வதில் இன்பமிருக்கிறது. ஆனால் மற்ற வர்ண தொழிலைச் செய்வதில் அபாயமிருக்கிறது.”
 மனுவின் சட்டங்கள்;
10;3; பார்ப்பனன் (எல்லா)வர்ணங்களுக்கும் மேலானவன். பிறப்பினால் உயரந்தவன்; சம்பிரதாயங்களை முறையாக கடைப்பிடிப்பவன்; புனிதன், இதனால் அவன் அனைத்து சாதிகளுக்கும் எசமானனாக இருக்கிறான்.
1 ; 93 (பிரம்மாவின்) வாயிலிருந்து பார்ப்பனன் பிறந்தாலும் அவன்தான் முதலில் பிறந்தாலும் வேதங்களுக்கு உரிமையாளம் அதலாலும் தன் உரிமையின் காரணமாக அனைத்து படைப்புகளின் எசமானன் அவனே.
1 ; 96 அனைத்து படைப்புகளிலும் மிகச் சிறந்தது உயிரினங்களே.அவற்றிலும் மிகச் சிறந்தது தன் அறிவால் வாழ்பவர்களே; அறிவில் சிறந்தது மனிதகுலம; அதிலும் சிறந்தவர்கள் பார்ப்பனர்களே.
1; 99 ஒரு பார்ப்பனன் பூமியிலே உயர்வானவனாகப் பிறக்கிறான். அனைத்து உயிர்களின் எசமானனாக இருக்கிறான். தர்ம விதிகளைக் காக்கவே இவ்வாறு பிறக்கிறான்.
1;100 இந்த உலகில் உள்ள அனைத்துமே பார்ப்பனர்களுக்குச் சொந்தமானவை. தனது பிறப்பின் மேன்மை காரணமாக இவை அனைத்துமே அவனுக்கு உரியதாக்கப்படுகிறது.
7 ; 37 அரசன் வைகறையில் துயலெழுந்து,பார்ப்பனனிடம் மரியாதையாக நடந்து மூன்று வேதங்களையும் அறநெறிகளையும் கற்று அவர்தம் வழிப்படி ஆட்சி செய்யவேண்டும்.
1;38 கல்வியிலும் வயிதிலும் மூத்த –உள்ளும் புறமும் தூய்மையான-சாத்திரங்கள் கற்ற- மூத்த பார்ப்பனனை எப்பொழுதும் அரசன் மதித்து நடக்கவேண்டும். காரணம் மூத்த வயதினரை மதிப்போருக்கு தீய ஆவிகளாலும் அச்சம் நேரிடாது.
9 ; 35 பார்ப்பனன் இந்த உலகத்தைப் படைத்தவனாக அறிவிக்கப்படுகிறான்.தவறுக்குத் தண்டனை தருபவன் அவனே.ஆசிரியனும் அவனே.எனவே அவனுக்கு விருப்பம் தராத வார்த்தைகளைச் சொல்வதும அவனை எடுத்தெறிந்து பேசுவதும் கூடாது.
10;123 பார்ப்பனனுக்கு ஊழியம் புரிவது ஒன்றே சூத்திரனின் மிகச் சீரிய தொழில் ஆகும். மற்ற எதுவுமே அவனுக்கு உரிய பலனைத் தராது.
10; 129 சூத்திரனால் செல்வம் சேர்க்க முடிந்த போதும் அவ்வாறு அவன் செய்யக்கூடாது. காரணம் செல்வம் சேர்த்துக்கோண்ட ஒரு சூத்திரன் பார்பனனுக்கு வருத்தத்தை உண்டு பண்ணிவிடுவான்.
   மேற்குறிப்பிட்ட பகவத் கீதை அறிவுரையும், மனுநீதி சூத்திரங்களும் திருவிதாங்கூரில் அடி பிசகாமல் மன்னர்களும், மன்னர்களை ஆட்டுவித்த நம்பூதிரிகளும் கடைப்பிடித்து அமுல்படுத்திய தன்மைகள்தான் அடித்தட்டு ஒடுக்கப்பட்ட, சூத்திரர்களான மக்களை சொல்லவொன்னா துன்ப துயரங்களுக்கு ஆட்படுத்தின.
      திருவிதாங்கூரில் நிலவிவந்த கொடுமையும் சூழலும் நிலச் சுவான்தார்கள் மேலும் நிலங்களைக் கைப்பற்ற உதவின. சமூகத்தில் சக்தியற்றவர்களின் நிலங்களை நிலச்சுவான்தார்களுக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் பாதுகாப்பில் வாழும்படி பிற்படுத்தப் பட்டோர் கட்டாயப் படுத்தப் பட்டார்கள்.
     சமுதாய அமைப்பின் மேல்மட்டத்திலிருந்த நம்பூதிரிகள் பெரிய பெரிய கோவில்களின் அறங்காவலர்களாகச் செயல்பட்டனர். அந்தக் கோவில்களுக்குச் சொந்தமாக பெரும்பாலான சொத்துகளையும் தர்ம சொத்துகளையும் அவற்றிலிருந்து வந்த வுரமானத்தையும் தமக்கே சொந்தமாக்கிக் கொண்டதால் அளவுக்கு அதிகமான நிலத்தையும் பொருளையும் உடையவர்களாக அவர்கள் விளங்கினர். அதே சமயம் சாதாரண குடிமக்களும் விவசாயிகளும் வைத்திருந்த நிலங்கள் தனிப்பட்ட பிராமண நிலச்சுவான்தார்களுக்கும் ஆலய நிர்வாகிகளுக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டன. இந்த நிலங்கள் ‘பிரம்மசுவம்’ என்றும் ‘தேவசுவம்’ என்றும் அழைக்கப்பட்டன. அவற்றை யாரும் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
     தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் ஒரு போதும் நிலங்களை வாங்கவோ அல்லது சொந்தம் கொண்டாடவோ அல்லது ஜன்மிகள் நிலைக்கு தங்களை உயர்த்துக்கொள்ளவோ முடியாது. வேறு வழியின்றி எஜமான்களின்(ஜன்மிகளின்) வயல்களில் வேலைசெய்யவும் இழிவான அசுத்தப்பணிகளைச் செய்யவும் வேண்டியிருந்தது. சாதியமைபின் கடுமையான மூன்று விதிகளான தீண்டாமை, நெருங்காமை, காணமுடியாமை ஆகியவை அவர்களுக்கு வேறெந்த வேலைகளையும் தேடுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எல்லா முக்கியமான பணிகளையும் பிராமணர்களும் நாயர்களும் மட்டுமே பகிர்ந்து கொண்டனர்.
    திருவிதாங்கூரில் எட்டில் ஒரு பகுதியினர் அடிமைகளாக வாழ்ந்தனர். ஜன்மிகள் என்னும் நிலச்சுவான்தார்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமாக சில அடிமைகளை வைத்திருந்தனர். இவர்களை நிலங்கள், விலங்குகள் போன்று விற்கவோ,வாங்கவோ அடகு வைக்கவோ செய்தனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் அடிமைகளாக விற்கப்பட்டனர். வறட்சியான காலங்களில் குழந்தைகளையும் அடிமைகளாக விற்றனர்.   
      பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிலவிடங்களில் ஒர் அடிமையின் விலை ஆறு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரையிலும் இருந்தது. பெண்களின் விலை மிக குறைவாகவே இருந்தது. இந்த அடிமைகளின் மனைவியை கணவனிடமிருந்து பிரித்து ஒரு எஜமானுக்கு விற்பதும், விலைக்கு வாங்கிய எஜமான் அவளை வேறொரு அடிமைக்கு மனைவியாக கொடுக்கும் பழக்கம் இருந்ததால், இவர்களின் குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டிருந்தது. அடிமைகளை அடிக்கவோ, கொல்லவோ கைகால்களைத் துண்டிக்கவோ எஜமானனுக்கு உரிமையுண்டு. அடிமைகளின் விலைப்பத்திரத்தில் அடிமையைக் கொல்லவோ,விற்கவோ செய்யலாம் என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டிருந்தது.
   பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தென் திருவிதாங்கூர் தாழக்குடி என்னும் ஊரில் மாடத்தி என்னும் தாழ்த்தப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை எருமை மாட்டுடன் நுகத்தடியில் கட்டி வயலை உழச் செய்திருக்கிறார் ஒரு எஜமான். அவள் வயலிலேயே உயிர்விட்டாள்.
    1859ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூரில் இரணியல்,கொல்லம்,அரிப்பாடு முதலிய இடங்களில் அடிமைச் சந்தைகள் இருந்தன.
    நாடார் இனத்தைச் சார்ந்த ஒரு பெண் ரவிக்கை அணிந்து கொண்டு சந்தைக்கு வந்திருக்கிறாள். இதைப் பார்த்த உயர்சாதிக்காரர்கள் அவளின் ரவிக்கையை நீண்ட கொக்கியால் இழுத்து கிழிக்கும்போது அவள் கழுத்தில் இருந்த தாலிக்கயிறும் அறுபட்டதால் துடி துடித்து வேதனைப்பட்டிருக்கிறாள்.அந்த இடத்திற்கு மக்கள் அழைக்கும் பெயர்’தாலியறுத்தான் சந்தை’ அழைக்கறார்கள். கன்னியாகுமரியின் வடக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அந்த இடம்.
   தாழ்த்தப்பட்டவர்கள் ஒவ்வொரு சாதியினருக்கும் குறிப்பிட்ட தூரம் வரையறை செய்யப்பட்டிருந்தது. ஒரு நாடார் அல்லது ஈழவர் ஒரு பிராமணனிடமிருந்து 36 அடி தூரத்திற்கு மேலும், ஒரு நாயரிடமிருந்து 12அடி தூரத்திற்கு அப்பாலும், . ஒரு புலையன் ஒரு பிராமணனிடமிருந்து 96 அடி தூரத்திற்கப்பாலும், ஒரு நாயரிடமிருந்து 60 அடிகளுக்கப்பாலும்தான் நிற்க முடியும்.
    தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தோர் தமது ஒதுக்குப்புறமான வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்லும்போது ஒரு தடிக்கம்பை வைத்துக் கொண்டு மற்றொரு குச்சியால் அதனைத்தட்டிக்கொண்டே செல்லவேண்டும். இது தீண்டத்தகாதவர் வருகிறார் என்பதை உயர்சாதியினருக்கு எடுத்துக்காடவேயாகும்.
   சில இடங்களில் ஓர் உயர்சாதி மனிதன் வருவதைக்கண்டால், ,புலையர்கள் காட்டுக்குள் ஒளிந்து விடுவார்கள். தீண்டாமை என்னும் கட்டுப்பாட்டால் தாழ்ந்த சாதி மக்கள் பலவித துன்பத்திற்குள்ளானார்கள்.   
   கிணறுகள், சந்தைகள் ஆகியவற்றையும் பயன்படுத்தக்கூடாதவாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. பொதுச்சாலைகளைக்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏறப்பட்டது.
   உயர் சாதி மக்களின் கோயில்களுக்கு அருகிலுள்ள சாலைகளைத் தாழ்ந்த சாதியினர் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
     தாழ்ந்த சாதியினர் சாலையில் நடந்து வரும்போது உயர் சாதியினர் எதிரே வந்தால் சாலையை விட்டு இறங்கி, அவர்கள் கடந்து செல்லும்வரை ஒதுங்கி நிற்க வேண்டும். சில சமயங்களில் சுமக்க இயலாத பாரமான சுமைகளை சுமந்து கொண்டு வரும்போதுகூட, இவ்வாறு காத்து நிற்க நேரிடும். இன்னும் சொல்லொன்னாத துயரங்களுக்கும் ,தீண்டாமைக் கொடுமைகளுக்கும் ஆட்பட்டே வாழ்ந்து வந்தார்கள்.
    கிழக்கிந்திய ஆட்சியில் அடங்கிய சமஸ்தானங்களில் திருவிதாங்கூர் எப்போதுமே சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதிலும் மலையாள பிராமணர்களின் அறிவுறுத்தலைச் செவி சாய்ப்பதிலும் முன்னணியில் நின்றது. திருவிதாங்கூர் என்னும் ராஜ்யம் உருவாவதற்கு முன்பு 1729-1758 கோவில் நிர்வாகம் கட்டுப்படுத்தப்பட்டாலும் நம்பூதிரிகளின் செல்வாக்கு அப்படியே இருந்தது.
    கர்னல் மன்றோ 1791ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவர் மெட்ராஸ் ராணுவப்பொறுப்பாளராக இருந்தவர்.திருவிதாங்கூர் ரெசடெண்டாக 1810 முதல் 1819 வரை இருந்தார். இவர் காலத்தில் பத்மநாதபுரத்தில் அதிகாரபூர்வமான அரசு வருவாய் துறையுடன் இந்தியாவை வடிவமைத்தாலும் கோயில் நிர்வாகிகளிடையே உள்ள மோசமான சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமலேயே ரெசிடெண்டாக இருந்தார்.
    சீர்திருத்த கிறிஸ்தவம் இங்கு அறிமுகமான போதும் ,அதன் வளர்ச்சியின்போதும் திருவிதாங்கூர் அரசு தடையாக இருக்கையில் அவர்கள் தங்கள் சமயப்பரப்புதலையும் செய்தார்கள். இந்து மதத்தில் சனாதன வர்ணாஸ்ரமம் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்ததால்,கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது வேகமாக நடந்தது.
அய்யாவின் வரலாறு;
   கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சுவாமித்தோப்பு முன்பு அதன்பெயர்
சாஸ்தான் கோவில் விளை என்ற ஊரில் மார்ச்12, 1809 ஆம் ஆண்டு பொன்னுமாடன் ,வெயிலாள் என்ற ஏழைத் தம்பதியினருக்கு வைகுண்ட சுவாமி பிறந்தார். பெற்றோர்கள் ‘முடி சூடும் பெருமாள்’எனப் பெயரிட்டனர். அன்றைய காலவிதிப்படி இந்தப் பெயரை உயர்சாதிக்காரர்களே சூட்டிக்கொள்ளலாம். சூத்திரர்கள் தாங்கள்  செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் பெயர் வைக்கவேண்டும்.இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரி, நாயர் மக்களிடையே நிலவிவந்த தன்மை மட்டுமல்ல, இந்த உயர்சாதிக்காரர்கள் ஏற்றுக்கொண்ட
    ‘நாம கரணத்தினால் பிராமணனுக்கு மங்களமும், சத்திரியனுக்கு பலமும், வைஸ்யருக்கு தனமும், ஏனையோருக்கு அவர்தம் பணியையும்( பணிவிடையைக்) குறிக்கும் பெயர்களை இடவேண்டியது’ என்ற மனுநீதிச் சூத்திரம், எழுத்தில் மட்டுமல்ல, உயர்சாதிக் காரர்களின் பண்பாட்டிலும் பதியவைத்துள்ள தன்மைதான் பெயரிடுவதிலும தடைப்படுத்தி, பனையேறும் தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் பிறந்தவருக்கு, மன்னனுக்கு இணையான பெயரை வைக்கலாமா?. இதுதான் நம்பூதிரிகளுக்கும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மன்னனுக்கும் எழுந்த கோபாவேசம். இந்தப் பெயரை வைக்கக் கூடாது என பயமுறுத்தவே, பொன்னுமாடன் வெயிலாள் தம்பதியினர் தங்களது குழந்தைக்கு முத்துக்குட்டி எனப் பெயரிட்டனர்
    இளமையில் துடிப்பாய் சமூக சேவை புரிந்தவராய், திடகாத்திரம் மிக்கவராய், மக்களின் நம்பிக்கையை பெற்றவராய் திகழ்ந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து, நீதி நூல்களையும் நல்ல முறையில் கற்று, ராமாயணம்,மகாபாரதம்,ஆகியவற்றைப் படித்ததோடு, அக்காலத்தில் ஊர் ஊராக போடப்பட்டு வந்த புராணங்கள் , கருத்து அடங்கிய பாவைக்கூத்துகளின் மூலம் கதைகளின் உள்ளடக்கத்தை உள்வாங்கிக்கொண்டு, தனது கனிந்த அறிவினால் சமுதாயத்தில் அன்று
நிலவி வந்த சீர்கேடுகளை ஆராய முயன்றார்.  சானார் சமூக மக்களும்,பிற தாழ்த்தப்பட்ட மக்களும் சந்தித்த ஒடுக்குமுறையை, புளுவினுங்கேடாக மதிக்கப்பட்டு வந்த நிலையைப் பார்த்து மனம் வெதும்பினார்.
    கூறிய அறிவும் கனிவான எண்ணங்கள் அவரிடம் நிறைந்திருந்ததால் அவருடைய வயதுக்கேற்றபடி சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வும் அவரிடம் தோன்ற ஆரம்பித்தது.
    விதவை மறுமனம் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் சமூகம் அங்கீகரிக்காத கொடுமை இருக்கும்போது,    நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக் காலத்தில், தன்னைவிட வயதில் கூடிய பரதேவதை எனும் ஒர் இளம் விதவையை மணந்தார். ஏழ்மையில் எளிய, இனிய வாழ்வு வாழ்ந்து விந்த காலத்தில் அவருக்கு சருமநோய் வந்துவிட்டது.
எல்லாவிதமான மருந்துகளையும் உட்கொண்டு பார்த்துவிட்டு, நோய் குணமாகாமல்,கடைசியில் 1833ல் திருச்செந்தூர் கடலுக்கு பெற்றோர்கள் எடுத்துச் சென்றனர். கடலில் குளிக்கச் சென்றவரை அலை இழுத்துச் சென்று மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியே வந்தார். அந்தக் காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட சாதியினர் நுழைய அனுமதியில்லை. அய்யா வைகுண்டசாமியும் அவரைச் சார்ந்த மக்களும் கோயில் கோபுரம் தெரியும் தூரத்திலிருந்துதான் வழிபட்டார்கள். கடலிலிருந்து வெளியே வந்தவுடன், தானொரு நாராயணரின் (விஷ்ணு) அவரதாரம் என்று பிரகடனப் படுத்தி,வஞ்சிக்கப்படாத சமத்துவமான சாதியில்லாத சமூகம் மலரப்போகிறது என்ற தீர்க்கமான பிரகடத்தோடு 

ஈடுபடத் தொடங்கினார். வைகுண்டசாமி வாழ்ந்த போது திருவிதாங்கூரை சுவாதித் திருநாள் மகாராசா அரசராயிருந்தார், மன்னனுக்கும் உயர்சாதி நம்பூதிரிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டது,.
  இதே காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி ரெசிடெண்டாக கர்னல் கல்லன் இருந்தார்,.இவர் சாதீயக் கட்டுப்பாட்டை கண்டுகொள்ளாமல் அதை தக்கவைப்பதையே விரும்பினார்.இதனால் பிற புராட்டஸ்டன்ட் சமயப் பணியாளர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினர்.
  இந்து மதத்தில் நிலவி விந்த தீண்டாமைக் கொடுமை,சாதியப்பாகுபாடு,அடிமைத்தனம் ஆகியவை தாழ்த்தப்பட்ட மக்களும் நாடார் இன மக்களும் கிறிஸ்தவ மதம் மாறுவதற்கு தூண்டின.இம்மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடுதலை பெற்ற  காலமும் இதுதான்.இதையெல்லாம் உற்று நோக்கிய அய்யா வைகுண்டர்,கடலில் நாராயணர் தன்னை ஏற்றுக்கொண்டு ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகள் இருக்கச் சொன்னதாகவும், அந்த மூன்றில் முதல் தவசு கலியுகம் அழித்து தர்மயுகம் மலரச் செய்வதற்கு, இரண்டாம் தவசு சாதியை ஒழிப்பதற்காக, மூன்றாம் தவசு நாட்டில் அதிகரித்துவரும் ஆணாதிக்கம் வீழ்த்தி பெண் சமத்துவம் அடைவதற்காக என்ற நோக்கத்தை நாராயணர் அருளினார் என்று மக்களிடம் பிரகடனப் படுத்தினார். இவைகள்தான் அய்யா வைகுண்டசாமி உருவாக்கிய இயக்கத்தின் திட்டங்கள்.
     இவற்றை வெளிப்படுத்துவது சைவ வைணவ கோட்பாடுகளை இணைத்துக்கொண்டு, பிராமனிய வைதீக பண்பாட்டுக்கு எதிரான நிலையை உள்ளாக்கி, வைகுண்டசுவாமி சொல்லச் சொல்ல அரிகோபாலன் சீடர் எழுதி முடித்த புனித நூல்கள் ‘அகிலத்திரட்டு அம்மானை’ மூலமும்,சாட்டு நீட்டோலை, அருள்நெறி ஆகியவை முலமும்தான். இவைகள்தான் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இயக்கம் என்று போற்றி சிந்தையிலேற்றலாம்.
   கலியுகம் அழித்து தர்மயுகம் மலர வைப்பது என்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரிக்கொடுமை,கூலி கொடுக்காமல் உழைப்பைச் வாங்கும் அநீதி ,நாடார் இன மக்களிடம் உற்பத்தியாகும் பதனீர் கருப்பட்டி,ஒலை ஆகியவற்றை எவ்வித விலையும் இல்லாமல் அபகரிப்பது போன்ற அநியாயங்களை ‘ஒழித்து தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்பதும்’ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
         ஒருவருக்கொருவர் நிரப்பாயிருந்திடுங்கோ’ என்ற சமதர்மயுகத்தைப் படைப்பதுதான் சாதியை ஒழிக்க மேற்கொள்ளுவதோடு,சர்வாதிகாரியான திருவிதாங்கூர் மன்னனின் செயல்பாடுகள்தான் கலியுக செயல்பாடு, அப்படிப்பட்ட மன்னன்தான் கலிநீசன்.இந்த அதிகார ஆணவத்தை முறியடிப்பதுதான் கலியுகம் வெல்வது என்பது.இதுதான் முதல் தவசு.
   அய்யா வாழ்ந்த காலம் முன்பிலிருந்து தொடர்ந்த தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டுவது  பிரதான நோக்கமே அய்யாவின் திட்டத்தில் பொதிந்திருக்கக் கூடியது. இதையே அகிலத்திரட்டு ஏட்டில்
 ‘சாதி என்னும் கொடிய பாம்பு
 சதி செய்யும் பாம்புதான்’ என குறிப்பிடுகிறார்.
பள்ளுபறை பதினெட்டு ஒடுக்கப்பட்ட ,தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட மக்களை இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி தந்திரம் கடைப்பிடித்து சாதி ஆதிக்கத்தின் தலைமுடியை பிடித்து உலுக்குவிதுதான் இவரது இரண்டாவது தவசின் லட்சியம்.
   பெண்கள் மக கேவலமாக மதிக்கப்பட்ட நிலைகளான மாராப்புச் சேலை அணிய தடை, உயர்சாதி பூசாரிகள் கோயில்களில் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம், ,கோயில்களுக்குள் பெண்களை அனுமதிக்காதது போன்ற இன்னும் பல அநீதிகளுக்கெதிராக மக்களை சிந்திக்கச்செய்து ஆண்பெண் சமத்துவ விழிப்புணர்வு அடையச் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றத்திருக்கான மூன்றாம் தவசு.
   ‘என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்
   ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா’ என்றும்
   பூ மக்கள் நீதமுடன் போட்ட தோள்சேலைத்தன்னை
   போடாதே என்றடித்தான் சிவனே அய்யா’ என்றும் சாட்டு நீட்டோலையில் அய்யா வைகுண்டர் கூறுகிறார். இந்த விடுதலைச் சிந்தனை அடங்கிய நூல்களை அப்போது ஒலைச் சுவடியில்தான் எழுதப்பட்டது. அடித்தட்டு மக்களிடம் படித்துக்காட்டி தெளிவுபடுத்த சுவாமித்தோப்பு, முட்டப்பதி, தாமரைக்குளம் பதி, அம்பலப்பதி, பூப்பதி ஆகிய ஐந்து ஊர்களில் பதிகள் ஆரம்பித்தார் அய்யா வைகுண்டர்.இவைகள்தான் மக்களுக்கு உருவாக்கிய சிந்தனைப் பள்ளிக்கூடங்கள் .நாராயணர் தனக்கு கட்டளையிட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட மூன்று தவசுகளும்தான் ஒட்டுமொத்த அய்யாவின் அடித்தட்டு மக்களுக்கான இயக்கங்களின் திட்டங்கள் என்று சொல்லலாம். இது 1848ல் காரல் மார்க்ஸும் பிரெடெரிக் ஏங்கெல்ஸூம் இணைத்து வெளியிட்ட கமயூனிஸ்ட் அறிக்கைக்கு ஒப்பானது என்பதுமட்டுமல்ல அதற்கும் முன்னோடியானது என்றே குறிப்பிடலாம்.
 துவையல் பந்தி இயக்கம்
முத்திரிக் கிணறின் மகிமை
      சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் தென் திருவிதாங்கூரில் சாதிவெறி,தலைவிரித்தாடியிது. உயர்ந்த சாதியினர் பயன்படுத்தும் கிணறு குளங்களைத் தாழ்ந்த சாதியினர் பயன்படுத்தக் கூடாது எனச்சட்டம் இயற்றி இதை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.அதைக் கண்டு மனம் நொந்த அய்யி வைகுண்டர் அந்தச் சட்டத்தை மாற்றியமைத்தார. பதினெட்டுச் சாதி மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே இடத்தில் கூடி,கிணற்றின் நீரைப் பயன்படுத்தும் படியாகச் சுவாமித்தோப்பில் கிணறு ஒன்றை அய்யா வைகுண்டர் ஏற்படுத்தினார்
 தன்னைக் காணவருவதற்கு முன்பாக அனைத்து சாதியினரும் குளித்து வருவதற்காக ஒரு கிணறு அமைத்தார். எல்லோரும் கூடி , கோரி குளிக்க
வேண்டுமென கட்டளை இட்டார்.அப்போது ஒரு சாதிக்காரர் மீது படும் தண்ணீர் வேறு ஒரு சாதிக்காரர் மீது படும் அப்போது தீண்டாமை மிரண்டு ஓடும் என்பதுதான் இந்த கிணற்றின் தத்துவம்,இக்கிணறுக்குப் பெயர்தான் ‘முத்திரிக்கிணறு’. இது இன்னும் சாமித்தோப்பில் அன்புவனம் என்ற பகுதியில் இருக்கிறது.
 துவையல் பந்தி இயக்கம்
 அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்து சுத்தமாக இருக்க வைக்க ‘துவையல் பந்தி இயக்கம்’ நடத்தி மக்களிடம் அறிவுரை கூறினார்.
 சமதர்மக் காலனி அமைத்தல்   
 இன்றைய காலத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் ஒரே வளாகத்தில் வீடுகளைக் கட்டி குடியேறச் செய்த இடத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் ‘பெரியார் சமத்துவபுரம்’எனப் பெயரிட்டது மதிக்கத் தகுந்த செயல்பாடுதான்.பெரியார் சமூக சமத்துவ பகலவன் என்பதில் பெருமையே.பல சாதிகளின் மக்கள் குடியேறிய பகுதிக்கு அவர் பெயர் மிக்கப் பொருத்தமே. இதையே  அய்யா வைகுண்டர் ஒடுக்கப்பட்ட சாதி மக்களனைவரையும் ஒரே வரிசையாக வீடுகளைக் கட்டி ஒரே தெருவில் வீடுகளில் காற்றோட்டமான ஜன்னல் வைத்து வீட்டின்முன் திண்ணை அமைத்து
 கட்டி எல்லோரும் கலந்து வாழ வழிகாட்டியிருக்கிறார். இதற்கு ‘சமதர்மக் காலனி’ எனப்பெயரிட்டார்.
சமத்துவப் பந்தி இயக்கம்   ‘
    சமத்துவப் பந்தி’ என்ற ஒரு கூட்டு வடிவத்தையும் அய்யா வைகுண்டரே உருவாக்கினார். இதுவும் பல்வேறு சாதி  மக்களிடம் தீண்டாமையை விரட்டி நெருக்கத்தை உருவாக்கிய அற்புத வடிவம் தீண்டாமையின் கோரவடிவம் நர்த்தனமாடிக்கொண்டிருந்த அக்காலத்தில் தொடங்கிய சமத்துவப் பந்தி இயக்கம் அசாதாரணமானதே.அம்பேத்கர் பிறந்த நாளான14. 4. 2014ல் குமரி மாவட்டத்தில் கொட்டாரம் ஆறுமுகபுரம் ஊரில் அம்பேத்கர் இளைஞர் மன்றத்தினர் நடத்திய சம்பந்தியில் தலித் மற்றும் தலித் அல்லாதோர் அனைவரும் சேர்ந்தே சாப்பிட்ட வெளிப்பாடு அய்யா வைகுண்டரின் இயக்கத்தின் தாக்கம்தான். குமரி மாவட்டத்தில் மக்கள் பல வைபவங்களில் ஆலயங்களில் இந்த சம்பந்தி இயக்கம் நடத்துவதே அய்யாவின் வழிகாட்டல் பின்னணிதான் அன்றி வேறில்லை.

 சலவைத் தொழிலாளி வீட்டில் உணவருந்துதல்
   சலவைத் தொழிலாளி பிச்சம்மாள் என்பவர் ஏதோவொரு முக்கிய வைபவத்திற்கு விருந்துக்கு அழைக்க, அவரால் வரமுடியாத இக்கட்டான நிலையில் தனது சீடர்களிடம் அவ்வீட்டிற்கு சென்று உணவருந்திவிட்டு வாருங்கள் என கட்டளையிட்டார். அவர்களும் சென்று உணவருந்தியமாதிரி காட்டிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் உணவருந்தவில்லை என தெரிந்துகொண்டார். பின்பு கடுமையான எச்சரிக்கை செய்து மீண்டும் அந்த பிச்சம்மாள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவரச் செய்து தன்னுடைய சமத்துவ நிலையை சீடரகளுக்கும் உணரச் செய்தார்.
 கண்ணாடி வழிபாடு 
  இந்து ஆலயங்ககளில் பிராமணர்களின் பூசை புனஸ்கார முறையின் தீண்டாமை வடிவத்தைக் கண்ட அய்யா வைகுண்டர் தனி வழிபாடாகிய உருவ வழிபாடில்லாத வழிமுறையை தேர்வு செய்து மக்கள் கண்ணாடி முன்னின்று தனது முகத்தைப் பார்த்து உனக்குள்ளேதான் சக்தி இருக்கிறது.வேறு எங்கும் அலையவேண்டியதில்லை.உனக்குள்ளே இருக்கும் ஆற்றலை நீயே உணரந்து கொள் என்று போதனையைக் கொடுத்தார்.இதுவே கண்ணாடி வழிபாடு என்று ஆனது.எந்த உருவத்தையும் ஏற்க வேண்டியதில்லை என்ற கொள்கையை கண்ணாடி வழிபாட்டின் மூலம் அறிவுறுத்தினார்.

சிறுதெய்வ வழிபாட்டை எதிர்த்தல்
        வைகுண்ட சுவாமி தாமே பேய் பல சீவ செந்து ஊர்வன, புற்பூண்டு,கல், காவேறரி, அறிய உபதேசித்தார். வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி, காவடி, ஆடு கிடா,கோழி,பன்றி, இதுவும்,இரத்தவெறி,தீபதூபம்,இலை,பட்டை,இது முதல் அவசியமில்லை,பேய்களை அறிந்து பேய்களிடம் நீங்களும் ஒதுங்கி இருங்கோ என்று உபதேசித்தார். மந்திரவாதம் செயவோரிடம் ‘உங்கள் சக்திகளை நான் எடுத்துவிட்டேன்.இனி நீங்கள் மந்திரவாதம் செய்தால் நரகமது பிடித்து தீ நரகில் மாள்வீர்’ என்று எச்சரித்து சிறுநெறி வழிபாட்டை அழித்துவிட்டு முற்றிலும் புதிய வழிபாட்டை மேல் நிலையாக்கக் கருத்தியல் முறையில் உருவாக்குகிறார்.அதே சமயத்தில் பெருநெறித் தெய்வமான கன்னியாகுமரி பகவதியை அழைத்து ‘தேனினும் இனிய தங்கையராய் திட்டித்த ஏதுவினால் காணிக்கை வாங்காதே’ என உபதேசிக்கிறார்.வழிபாட்டின்போது ஆடி கோழி பலியிடாதீர்கள் என அறைகூவல் இட்டு, புதிய வைதீக முறைக்கு எதிராக,நாடார் மக்களின் நாட்டார் தெய்வக் கோயில்களைப் பதிகளாக மாற்றியது அய்யாவின் பெரும் முயற்சி.
  தொட்டு நாமம் சாத்திடுக
 தன்னைக் கண்டு ஆசீர்வாதம் வாங்க வருவோரிடம், ‘தொட்டு நாமம்’ சாத்துவது என்ற சமத்துவ முறையைக் கடைப்பிடித்தார்.கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாட்டின்போது,அனைவருக்கும் பாதிரியார் நாக்கில் அப்பத்தை வைத்து ஆசிர்வாதம் வழங்குவதற்கு ஒப்பானது ஆகும்.இம்முறையிலும் தீண்டாமை ஒரங்கட்டப் படுவதை நாம் பார்க்கலாம். இந்து வைதீக கோயில்களில் குறிப்பாக அவர் காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யும் இடத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும்போது பூசாரி திருநீறு பூ போன்றவற்றை தூர நின்று பக்தர்களின் கையில் தூக்கி வீசுவதைப் பார்த்தே இம்முறைக்கெதிரான முறையைக் கடைப்பிடித்தார்.
  தலைப்பாகை இயக்கம் 
    தன்னை க் காண வருவோரிடம் பண்ணையாரிடம் அடிமை தனது துண்டை எடுத்து கக்கத்தில் கட்டுவதும், இடுப்பில் கட்டுவதும் கூடாது,இது அடிமையின் சின்னம்.உன் துண்டை எடுத்து தலையில் கட்டு,அது உனக்கு ராஜகிரீடம் ஆகும். வைதீகர்களின் அடிமைச் செயல்பாடுதான் துண்டை இடுப்பில் கட்டுவது எனவே அது விட்டொழிக்க “நீ யாருக்கும் அடிமையில்லை என்பதை வெளிப்படுத்து” என்று ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிமிர்ந்து நிற்கச் சொன்னார்.இதுவே தலைப்பாகை இயக்கம் என்பதாகும்.இப்போதும் பதிகளில் வழிபடும் ஆண்கள் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டுதான் வழிபடுவார்கள்.பணிவிடை செய்யும் ஆண்களும் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டுதான் பணிவிடை செய்வார்கள்.
பெண்ண்டிமை கண்டு வெகுண்டெழுதல்
   காலங்காலமாக ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமை தொடர்ந்து வருகிறது.அய்யா வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை அதே நிலைதான். காரணம் மனு (அ)தர்மம் என்பது பெண்ணையும் விடுவைக்கவில்லை. பெண்கள் கேவலப்புத்து உடையவர்கள்.பொய்யைப்போல அழுக்கானவர்கள்.பெண்ணுக்கு வெள்ளை உள்ளமும் இல்லை.பெண்பிறவியைத் தூய்மையாக்கும் செயல்பாடுகள் எதுவுமில்லை.மந்திரமும் இல்லை.அவர்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் உரிமை ஏதுமில்லை.சடங்கு ஆசாரங்களில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.பெண் தனது கணவனுக்குப் பணிவிடைகள் செய்து அவனைப் பேணுவது ஒன்றுதான் அவளது மோட்சத்திற்குரிய வழியாகும்.’என்று அடிமை அஸ்திவாரம் போட்டால் அதுவே கெட்டிதட்டிப்போய் சமூகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதுவாகத்தானே அமைந்து இன்றளவும் முழுமையாக மாறாமல் தொடர்ந்து கொண்டு உள்ளது. சமூகத்தில் உயர்சாதியினரும் இந்த அடிமைத்தனத்தை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்து வந்ததால்,இதன்மீது சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல பெண்களும் பதிகளில் பணிவிடை செய்யலாம் என்றும்,ஆணும் பெண்ணுங்கூடி ஆச்சாரம் செய்திடுங்கோ என்றும், பெண்பாவம் பாராதே என்றும்,பெண் நாளை உலகை ஆளுவாள் விடுதலை பெறுவாள் என்றெண்ணி பெட்டைக்கோழி தட்டிக்கூவும் என்றும் உரக்க முழங்கினார்.ஆணுக்கு இணையாக பெண்ணினம் சமமாக நிமிர்ந்தெழுவர் என்ற நம்பிக்கையை விதைத்தார்..
    கலைஞர் கருணாநிதி எழுதி இயக்கிய பராசக்தி திரைப்படத்தில் ‘கோயில் கூடாது என்பதற்கில்லை அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது’என்று வசனம் வரும். இக்கொடுமை அய்யா வாழ்ந்த காலத்திலேயே கோயிலில் பணிசெய்யும் தேவதாசிகளுக்கு நம்பூதிரி பூசாரிகள் பக்தி என்ற பகல்வேஷத்தில் செய்த கொடுமைகளை அகிலத்திரட்டில்
‘வெங்கப்பயல் சிலர் வேசையுட ஆசையினால்
என்னைக் கெணியாமல் என் கோவிற்கு உள்ளேதான்
சன்னை சொல்லிப் பெண்களுடன் சரசமிட்டு எச்சிலிட்டான்
இருபேரும் ஒத்திருந்தாலும் பழுதல்லவோ
ஒருவன் பெண்ணாளை ஒரு நம்பூதிரி பிடித்து
எனக்கு ஏவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்
மனம் பொருந்தாக் குழலி மார்பின் காலை பிடித்து
இழுத்து வலித்து இழுக்கேடு செய்யவென்று
பழுத்துச் சழித்த பருத்த ஒரு நம்பூதிரி
மங்கை மனம் சலங்க வாரிப் பிடித்து இழுத்து
கொங்கைதனை மங்கமாய்க் கூறழியவே கிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி என் பேரில் ஒரு சாபம் கூறினளே’ என்று பெண்களின் அவல நிலையை கண்ணுற்று அம்பலப்படுத்தி குற்றம் சாட்டுகிறார்.

 மன்னனின் எரிச்சல் ஏன்?
      பள்ளுபறை பதினெட்டு சாதியினரையும் ஒன்றுசேர்த்து போதனை செய்து உத்வேகமூட்டியது, வர்ணாஸ்ரம மேலாதிக்கதுக்கும் எதிராக மக்களிடம் வைதீக முறைக்கு சமாதி கட்டியது, தாழ்ந்த குலத்தில் பிறந்து தன்னை நாராயணரின் அவதாரம் எனப் பிரகடனப்படுத்தியது, கூலிச் சுரண்டல் முறையை அம்பலப்படுத்தியது, ஆண் பெண் சமத்துவ சிந்தனையை விதைத்தது,சுமார் 200க்கும் மேற்பட்ட வரிகளை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தலையில் சுமத்தியதை சாடியது கோயிலில் தேவதாசிகளுக்கு இழைத்த அவமானங்களை அம்பலப்படுத்தியது,ஆகியன சனாதன ஆளும் ஆதிக்க வர்க்கத்தின் அடிவயிற்றை கலக்கியது. வைதீகத்தை சம்மட்டி வைத்து அடிப்பதுபோல் மக்களிடம் விழிப்புணர்வைக் கிளப்பியது. இவற்றைக் கண்டு எரிச்சலடைந்த மன்னனும் ஆதிக்க சாதியினரும் அய்யா வைகுண்டருக்கு இன்னல் தரும் வேலையில் ஈடுபட்டார்கள்.



No comments:

Post a Comment